வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

Saturday, October 30, 2010

சிவமயம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்


1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம் சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.
2. இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.
3. நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதே என்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.
4. நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி அன்புடன் சாமாண்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.
5. மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.
6. வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள் வேறே இருக்கின்றன. பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்ள் கொண்டது. பதினெழு புராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது.
7. பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. (சிவ என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம் சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும்.
8. வேதங்களுள் யஜுர் வேதம் முக்கியமானது. அதற்குள் அதன் மத்திய பாகமாகிய நாலாவது காண்டம் முக்கியமானது. அதற்குள்ளும் மத்திய பாகமான நாலாவது ப்ரச்னம் முக்கிய மானது. அதுதான் ஸ்ரீருத்ரம். அதற்குள்ளும் ‘நம: சிவாய’ என்ற பஞ்சாக்ஷர வாக்கியம் மத்தியில் இருக்கிறது. அதன் மத்தியில் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரங்கள் அடங்கியுள்ளன. இதையே ஜீவரத்னம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இந்த அபிப்பிராயத்தை அப்பய்ய தீக்ஷிதர் ப்ரம்மதர்க்க ஸ்தவத்தில் சொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம் என்று தெரிகிறது.
9. அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாகச் சிவபக்தர்கள் எல்லோரும் ஐந்து வித காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும். அவைகளாவன: (1) விபூதி தரித்தல், (2) ருத்ராக்ஷம் அணிதல், (3) பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபம் செய்தல், பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசமாகாதவர்கள் ‘சிவ’ என்ற பதத்தை ஜபம் செய்தல், (4) வில்வ தளத்தால் பரமேச்வரனைப் பூசித்தல், (5) இருதயத்தில் சதா சிவத்யானம் செய்தல் இவைகள் ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக் கொடுக்கக் கூடியது. (குறிப்பு: பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேச பெற்று ஜபம் செய்தல் சிறப்பு. எனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத் தாராளம் சொல்லலாம். கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே - சம்பந்தர்.)
10. பரமேச்வரனுடைய கீர்த்தியை நாம் வாக்கினால் சொல்லுவதனாலும் கேட்பதனாலும் பவித்திரர்களாக ஆகிறோம். அவருடைய ஆக்ஞையை யாரும் மீறமுடியாது. அகம்பாவமாக இருக்கும்போது அவர் சிக்ஷிக்கிறார். குழந்தைகள் ஏதாவது தப்பு செய்தால் நாம் அடிக்கிறோம். அதுபோல பரமேச்வரன் தேவதைகளை சிக்ஷித்தார். காளகூடவிஷம் பாற்கடலில் உண்டானபொழுது அதைச் சாப்பிட்டு ரக்ஷித்தார். சகல தேவதைகளும் பரமேச்வரனுடைய குழந்தைகள்.
11. பரமேச்வரன் ஓங்காரம், ஸ்வரூப ப்ரம்மமும் ஓங்காரந்தான். அதனுடைய அர்த்தத்தை விசாரிக்கும் ஓர் உபநிஷத்தே தனியாக இருக்கிறது. அதற்கு மாண்டூக்யோபநிஷத் என்று பெயர். அதில் ‘சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மன்யந்தே’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிவஸ்வரூபம் தான் பரப்பிரம்மம். ப்ரதோஷ காலத்தில் ஈச்வர தரிசனம் செய்ய வேண்டும். ஈச்வரன் கோயிலில் ப்ரதோஷ காலத்தில் எல்லாத் தேவர்களும் வந்து ஈச்வர தரிசனம் செய்கிறார்கள்.
12. சாங்க்ய சூத்திரத்தில் மூன்று கண் உள்ளவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அமரமும் அப்படியே சொல்லுகிறது. லோகத்தில் ஈச்வரன் என்ற சப்தம் சிவனுக்கே வழங்கப்படுகிறது. அவன் மஹாபுருஷன், ப்ரம்ம சூத்திரத்தில் ‘சப்தாதேவப்ரமித’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஈசானன் என்னும் சப்தத்திற்கு எது அர்த்தமோ அதுதான் பரமேச்வர ஸ்வரூபம்.
13. நம்முடைய ஆசார்ய ஸ்வாமிகள் ப்ரச்நோத்தர ரத்ன மாலிகா என்ற க்ரந்தத்தில் ஒரு கேள்வி கேட்கிறார். ‘கோ ப்ராம்மணை ருபாஸ்ய:?’ ‘காயத்ரி அர்க்காக்னி கோசர: சம்பு:’ எந்த வஸ்து காயத்ரி, அக்னி, அர்க்கன் (சூரியன்) என்னும் மூன்றிலும் ப்ரகாசிக்கிறது? சிவன் தான். காயத்ரியின் பரமதாத்பர்யமாயிருப்பவர் அவரே. சூரியனிடத்தில் பிரகாசிப்பவரும் அவர் தான். ஸ்ரீருத்ரத்தில் பரமேச்வரன் அக்னி ஸ்வரூபியாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இந்த மூன்றிலும் பரமேச்வரனை ஆராதிக்க வேண்டும்.
14. விவாஹ காலத்தில் அம்பாளை அவசியம் ஆராதிக்க வேண்டும். ருக்மணி ஸ்ரீகிருஷ்ணன் பர்த்தாவாக வரவேண்டுமென்று அம்பிகையை ஆராதித்தாள். அம்பிகையின் ஆராதனத்தால் பதிபக்தியும் குருபக்தியும் உண்டாகிறது. அதற்காகத்தான் ருக்மணி பூஜை செய்தாள்.
15. ஜகத்துக்குத் தாயாகவும் கருணையுடையவளாகவும் இருக்கும் பரதேவதையிடம் பக்தி இருக்க வேண்டும். எப்படி குழந்தைக்கு வேண்டியதைத் தாய் தருவாளோ அப்படி அம்பிகை லோகத்தில் வித்தை, செல்வம் முதலியவைகளை அடையச் செய்து பின்பு தானாகப் பழுத்துப் பரமானந்தத்தைப் பெறும்படி அனுக்ரஹம் செய்வாள்.
16. அம்பாளுக்கும் பரமேச்வரனுக்கும் உள்ள சம்பந்தம் எப்படிப்பட்டதென்றால் சரீர சரீரி பாவ சம்பந்தம். உடலும் உயிரும் எப்படியோ அப்படிதான் சரீர சரீரி பாவமும். இந்த உடலுக்கு உயிர் இருக்கிறது. இந்த உயிருக்கு இன்னோர் உயிர் ஆதாரமாக இருந்தால் அதைத்தான் உயிருக்கு உயிராய் இருப்பது என்று சொல்வர். பரமேச்வரன் உயிர் என்றால் அந்த உயிருக்கு உடம்பு எது? அம்பாள்தான். ‘சரீரம் த்வம் சம்போ:’ என்று ஆசார்யாள் அம்பாளைப் பார்த்துச் சொல்லுகிறார்.
17. சர்வஜகத்தும் பரமேச்வரனுடைய சரீரம். அதற்கு அப்படியே கவசம் மாதிரி இருப்பது அம்பிகை சரீரம். அப்படி இருக்கும்படியான நிலையில் பஞ்சபூதங்களுக்கும் மேலே மனசு என்று ஒன்று இருக்கிறதே அதுவும் நீதான். ஆகாசமும் நீதான். அக்னியும் காற்றும் ஜலமும் பூமியும் நீதான். நீயே எல்லா ஸ்வரூபமாகவும் ஆகியிருக்கிறாய் கொஞ்சம் கொஞ்சம் எங்களிடத்திலிருக்கும்படியான ஞானம், ஆனந்தம் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக சிதானந்த ஸ்வரூபமாக இருப்பவளும் நீதான். சமஸ்த ப்ரபஞ்சமும் உன்பரிணாமத்தைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது. சிவன் சரீரி, நீ அவனுக்குச் சரீரம், சிவயுவதி பாவம் உங்கள் இரண்டு பேரிடத்திலும் இருக்கிறது. இப்படி ஆசார்யாள் சௌந்தர்ய லஹரியில் சொல்லியிருக்கிறார்கள்.
18. தொடர்ச்சியாக வந்த தாரையை நாம் அறுத்துவிடக் கூடாது. ப்ராணாயாமத்தோடு சித்த ஏகாக்ரத்தோடு மந்த்ரலோப மில்லாமல் பரமேச்வர அர்ப்பணம் பண்ணி எல்லாவற்றையும் கர்மானுஷ்டானங்கள் பண்ணவேண்டும். பக்திச்ரத்தையோடு கர்மகலாபத்தோடு பண்ண வேண்டும். அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
19. காயத்ரி என்னும் வார்த்தைக்கு எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது என்பது அர்த்தம். கானம் பண்ணுவது என்பது ப்ரேமையுடனும் பக்தியுடனும் உச்சரிப்பதாகும். யார் தன்னைப் பயபக்தியுடனும் ப்ரேமையுடனும்த உச்சாரணம் செய்கிறார்களோ அவர்களை காயத்ரி மந்திரம் ரக்ஷிக்கும்.
20. ப்ரதோஷ காலத்தில் எல்லோரும் சிவஸ்மரணம் பண்ண வேண்டும். மனதினாலும் வாக்கினாலும் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரங்களைத் தியானித்துச் சொல்ல வேண்டும். நித்யம் சந்த்யாகாலம் ப்ரதோஷ காலமாகும். த்ரயோதசி சந்த்யா காலத்தில் இருக்கிறது மஹாபிரதோஷ காலமாகும். நித்யமும் சாயங்காலத்தில் ஐந்து நிமிஷமாவது சிவ ஸ்மரணை பண்ணிக்கொண்டு வர எல்லோரும் சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். ஆயுள் பர்யந்தம் செய்வதாக சங்கல்பம் பண்ணிக் கொண்டு மனதினால் ஸ்மரணம் பண்ணிக்கொண்டு வாக்கினால் சிவநாமாவைச் சொல்ல வேண்டும்.
21. உஷ்ணத்தினால் உருக்கப்பட்ட நெய்யை நிறமற்றதாகக் காண்கிறோம். அதே நெய் குளிர்ந்தவுடன் வேறொரு நிறத்தையடைகிறது. ஈசனை உருவமற்றவர், அரூபி எனச் சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால் பக்தர்களின் உள்ளத்தில் ஈசன்பால் அன்பு பரிபூரணமாக விளங்கும் பொழுது அந்தக் குளிர்ந்த நிலையில் உருவம் இல்லாத கடவுளும் அவர்களது பக்திக்குக் கட்டுண்டு அவர்களை உய்விக்க ஓர் உருவத்தை யடைகிறார்.
22. ஓரிடத்தில் ஆபரணம் எதுவுமின்றி இயற்கை எழிலுடன் ஈசன் பிக்ஷாண்டார் மூர்த்தியாகத் திருக்கோலங் கொள்ளுகிறார். மற்றொரு புறம் அழகே உருக்கொண்ட சுந்தரேச்வரராக அவர் காட்சியளிக்கிறார். அதே கடவுள் பயமுள்ளவர்களுக்குப் பயத்தைப் போக்கி அபயத்தை அளிக்கும் பைரவ மூர்த்தியாகத் தோன்றுகிறார். வீரத்தைக் காண்பிக்கும் நிலையில் அவரே வீரபத்திரராகவும் காட்சியளிக்கிறார். தேவர்கள் விரும்பிய ஆனந்தத்தைக் கொடுக்க சிற்சபையில் அந்த ஈசனே நடனமாடுகிறார். எல்லாவற்றிலும் உயர்ந்ததான ஞானத்தைக் கொடுக்கும் தெய்வமாக தக்ஷிணாமூர்த்தி வடிவத்துடன் அமர்ந்து மௌனத்தினால் சனகாதி முனிவர்களுக்கு அவரே உபதேசம் அருள்கிறார். இவைகளெல்லாம் பரமசிவனின் திருக்கோலங்கள்.
23. சுவாமி எங்கும் இருக்கிறார். அவரை ஒரு கல்லில் வைப்பானேன் என்று கேட்கலாம். எங்கும் அவர் இருப்பதாகச் சொல்லுகிறோமாயினும் எங்கும் அவர் இருக்கின்றார் என்ற நினைவு மனதில் இல்லை. சுவாமி எங்கும் இருக்கிறார் என்ற எண்ணம் இருந்துவிடின் பொய்சொலுவானா? கெட்ட காரியம் செய்வானா? எங்கும் அவர் இருப்பது உண்மையே, அவர் இருப்பது மாத்திரம் நமக்குப் போதாது. அவருடைய அருளைப்பெற வேண்டும்.
24. சூர்ய கிரணம் இருக்கிறது. ஒவ்வொரு கிரணமும் நெருப்பே. ஆனால் ஒரு துணியை வெய்யிலில் காட்டினால் அதில் தீப்பற்றிக் கொள்ளவில்லை. லென்ஸ் என்ற பூதக் கண்ணாடியை வெய்யிலில் காட்டி அதன் கீழ் ஒரு துணியைப் பிடித்தால் அதில் தீப்பற்றிக் கொள்கிறது. பூதக்கண்ணாடி அனேக கிரணங்களை ஒருமிக்கக் குவிக்கிறது. அப்படியே எங்குமுள்ள ஈச்வரனுடைய அருள் நமக்குக் கிடைக்கும்படிச் செய்ய ஆலயம் அவசியமாக இருக்கிறது.
25. கோடிகோடி மக்கள் வீணாகப்போனாலும் ஒருவன் பூர்ணத்வம் அடைந்து விட்டால் அதுதான் நம்முடைய மதத்தின் ப்ரயோஜனம். அவன் ஒருவன் அனுக்ரஹகத்தாலேயே உலகம் க்ஷேமமடையும். அப்படிப்பட்ட ஒருவன் உண்டாவதற்காகத்தான் நாம் பிரசாரங்களைச் செய்கிறோம்.
26. உலகத்தில் பாவம் பண்ணாமல் இருக்கிறவன் யாராவது உண்டா என்றால் குழந்தை அல்லது பைத்தியக்காரன்தான். ஞானிகளின் உயர்ந்த நிலைக்கு உதாரணம் ‘பாலோன்மத்தவத்’ என்று சொல்லுவார்கள். பாலன் என்றால் குழந்தை. உன்மத்தன் என்றால் பைத்தியம். உன்மாதம் என்றால் தலைக்கு மேலே ஏறிப்போகிற பித்தம். உன்மாதத்தை உடையவன் உன்மத்தன். ஈசுவரனுக்கு உன்மத்தசேகரன் என்று பெயர். உன்மத்தம் என்றால் ஊமத்தம் பூ. சம்ஸ்க்ருதத்தில் ஊமத்தைக்கு உன்மத்தம் என்று பெயர். ஊமத்தம் பூவை அவன் தரித்துக் கொண்டிருக்கிறான். அதில் சிவனுக்கு அதிகப் பிரியம். உன்மத்தசேகரன் என்பதற்கு இரண்டாவது அர்த்தம் பைத்தியத்துக்குள் தலைவன் என்பது.
27. பரமசிவனுக்கு உரிய ஐந்து அடையாளங்களில் பஸ்மமாகிய விபூதி ஒன்று; அவனுக்குப் பிரியமான மற்றோர் அடையாளம் ருத்ராக்ஷம். வில்வம் மற்றொன்று. பஸ்மம் சத்ய ஸ்வரூபமானது. அதை சாக்ஷாத் பரமசிவனுடைய ஸ்வரூபமே என்று சொல்லவேண்டும். ப்ரபஞ்சமெல்லாம் நசித்தாலும் தான் அழியாமல் இருப்பவன் பரமசிவன். உலகத்திலுள்ள பொருள்கள் எல்லாம் எரிந்துபோனால் பஸ்பமாகி விடுகிறது. அதை எரித்தால் அது அழிவதில்லை. சிவ ஸ்வரூபமும் அத்தகையதே.
28. ருத்ராக்ஷத்தின் பெருமை மிக அதிகம். ருத்ராக்ஷத்தைச் சிவபெருமானுடைய அடையாளமாகப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள். ருத்ரனுடைய நேத்திரம் அது. அதைத் தமிழில் ‘திருக்கண்மணி’ என்று சொல்லுவார்கள். மற்ற விருக்ஷங்களுடைய விதைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த ருத்ராக்ஷத்திற்கு உண்டு. இயற்கையில் துளையோடு உண்டாவது ருத்ராக்ஷம் ஒன்றுதான். இந்த ருத்ராக்ஷம் பாரத தேசத்தில் நேபாளத்தில் இருக்கிறது.
29. அறுபத்தி நான்கு கலைகள், பதினான்கு வித்தைகள், இவற்றில் நான்கு வேதங்கள் பிரதானமானவை. நான்கு வேதங்களுள் மூன்று வேதங்கள் பிரதானமானவை. மூன்று வேதங்களுள் யஜுர்வேதம் பிரதானமானது. யஜுர் வேதத்திலும் மத்திய காண்டம் பிரதானமானது. மத்திய காண்டத்திலும் ஸ்ரீருத்ரம் பிரதானமானது. ஸ்ரீருத்ரத்திலும் பஞ்சாக்ஷரம் பிரதானமானது. பஞ்சாக்ஷரத்திலும் ‘சிவ’ என்ற இரண்டு எழுத்துக்கள் பிரதானமானவை, வேதத்துக்கு ஜீவாம்சமாக இருப்பவை ‘சிவ’ என்னும் இரண்டு அக்ஷரங்கள். பஞ்சாக்ஷர உபதேசம் நாவுக்கு ஆபரணமாக இருப்பது.
30. உலகத்திலுள்ள எல்லாருமே சிவன் குடிமக்கள். சிவன் மஹாபிதா. நாம் எல்லோரும் யக்ஞம் செய்கிறோம். அக்னி காரியம் இல்லாமல் வைதிகமதமே இல்லை. உலகம் முழுவதுமே வேதம் பரவியிருந்த காலத்தில் எல்லோருமே அக்னி காரியம் செய்தார்கள். அக்னி காரியத்தின் கடைசியில் பஸ்ம தாரணம் உண்டு. வைஷ்ணவர்களாக இருந்தால் பாஞ்சராத்ர ஆகமத்திலுங்கூட ஹோமங்களுக்குப் பிறகு ஹோம பஸ்மத்தை எடுத்துத் தரித்துக் கொள்ள வேண்டும்.
31. சப்தத்வீபங்களிலும் வேதமே பரவியிருந்த காலத்தில் உலகம் முழுதும் பஸ்மதாரணம் செய்து கொண்டிருந்தார்கள். நாம் செய்த அபசாரங்களால் இன்றைக்கு இந்த தேசத்தை தவிர இதர தேசங்களில் மதாந்தரங்கள் வந்தவிட்டன. அதற்கு நாமே காரணம். நாம் மறுபடியும் நம்முடைய அனுஷ்டானங்களை எல்லாம் சரிவர மேற்கொள்ள வேண்டும். வைதிகமதம் முன்போலவே எல்லா இடங்களிலும் வரவேண்டும். இதற்கு நம்மிடத்தில் அனுஷ்டானம் வரவேண்டும். பஸ்மதாரணம் அவசியம். பஸ்மம் சிவஸ்வரூபம். கலியுகத்தில் எல்லாவிதமான பாபங்களையும் போக்குவதற்கு பஸ்மதாரணம், ருத்ராக்ஷதாரணம், சுத்த ஸ்படிக ஸ்வரூபத்யானம், வில்வ அர்ச்சனை இவைமிக அவசியம்.
32. பெரியவர்கள் தங்களுடைய அனுபத்தின் மூலமே வெளியே சிவகாரியங்களைச் செய்து, உள்ளே அதற்கு ஏற்ற விளைவுகளை உண்டாக்கிக் கொள்ளலாம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அதனால் தான் மிலிட்டரிக்காரன் யூனிபாஃரம் போட்டால் வீரத்தன்மை வருகிறது என்று சொல்லுகிறான். அப்படித்தான் பக்தி வரவேண்டும், சாந்தம் வர வேண்டும், சத்தியம் வர வேண்டும் என்றால் ‘சிவ’ சின்னங்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொன்னார்கள். வெளியில் நாம் செய்கின்ற சில சம்ஸ்காரங்களினாலே உள்ளே சில நன்மைகள் ஏற்படுகின்றன. இவை எல்லாம் வெளிவேஷம் என்று நினைத்தால் வெறும் வேஷமாகவே போய்விடுகின்றன. ஆத்மார்த்தமாக ஜீவனை பரிசுத்தம் செய்து கொள்வதற்காகச் சின்னங்களை அணிகிறேன் என்று நினைத்தால் சத்தியமாக உள்ளே பரிசுத்தம் ஏற்படுகிறது. புறத்திலே தரிக்கும் சின்னங்கள் ஆத்மாவுக்கு உபயோகப்படுகின்றன.
33. நாம் எத்தனையோ அபசாரம் பண்ணிக் கொண்டிருந்தாலும் நமக்கெல்லாம் அனுக்ரஹம் பண்ணிக்கொண்டு பரமேச்வரன் சகல புவனங்களையும் ரக்ஷித்துக் கொண்டிருக்கிறார். நாம் செய்கிற அக்கிரமத்தைப் பார்த்தோமானால் நமக்கு ஒருவேளை அன்னங் கிடைக்கலாமா? அப்படி இருக்கிறபோது நம்மைப் போன்ற சகல ஜீவராசிகளுக்கும் ஒவ்வொரு வேளையும் அன்னம் கிடைத்துக் கொண்டிருக்கும்படியாக நம்மிடமிருந்து ஒருவித பிரயோஜனத்தையும் எதிர்பார்க்காமல் சர்வேச்வரன் அனுக்ரஹம் செய்து கொண்டிருக்கிறார்.
34. சகல வஸ்துக்களும் அழிந்தாலும் கடைசியில் தான் ஒன்று மட்டுமே சத்தியமாக இருக்கிற பஸ்மத்தை நெற்றியிலும், ஸ்வபாவமாகத் துவாரங்களுடனும் முகங்களுடனும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிற ருத்ராக்ஷங்களைக் கழுத்திலும், சாக்ஷாத் மஹாலட்சுமியின் வாசஸ்தலமாகிய வில்வத்தைச் சிரசிலும், வேதத்தின் மத்யமணிக்கு, நடுநாயகமணிக்கு, ஒப்பாக விளங்குகிற ‘சிவ’ என்னும் இரண்டு அக்ஷரங்களை நாக்கிலும், சுத்த ஸ்படிக ப்ரகாச மஹாலிங்கத்தை உள்ளத்திலும் தரித்துக்கொண்டு ஜன்ம சாபல்யத்தை அடைய வேண்டும்.
35. நாம் எதை நினைக்கிறோமோ அது மயமாக ஆகிவிடுகிறோம். சுத்த ஸ்படிகமாக விளங்குகிற பரமேச்வரனை நினைத்தால் நம் மனசு சுத்த ஸ்படிகமாக ஆகும். அவர் தான் எப்போதும் துக்கமென்பதே இல்லாதவராக ஆனந்த ஸ்வரூபியாக இருக்கிறார். ஆகவே விபூதி ருத்ராக்ஷ தாரணம், பஞ்சாக்ஷர ஜபம், உள்ளே சுத்தஸ்படிக சங்காச ரூபியாகிய பரமேச்வரனுடைய தியானம், வில்வார்ச்சனை இவற்றை எப்போதும் நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
36. ஸ்ரீஅப்பய்ய தீக்ஷிதர் என்று ஒரு பெரியவர் இருந்தார். இன்றைக்கு நாம் விபூதி ருத்ராக்ஷம் தரித்திருப்பது அவர்களுடைய ப்ரயத்தனத்தின் ப்ரயோஜனம். அவர்கள் 104 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்கள். விஷ்ணு த்வேஷத்தினால் அப்படிச் செய்யவில்லை. விஷ்ணு பக்தி என்று பேர் வைத்துக்கொண்டு சிவ பக்தியை நாசம் பண்ணி சிவத்வேஷத்தை வளர்ப்பதை அவர்கள் வெறுத்தார்கள். ‘சிவத்வேஷத்தை சகிக்க மாட்டேன்’ என்று சொல்லிச் சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்கள்.
37. ‘வேதத்தில் ஸ்வாமியைப் பற்றிச் சொல்லும்போது’ எதற்கு மேல ஒன்றுங் கிடையாதோ அது தான் ஸ்வாமி. எதற்குக் கீழே ஒன்றுங் கிடையாதோ அது தான் ஸ்வாமி. மிகப் பெரியனவற்றுக் கெல்லாம் பெரியது ஸ்வாமி மிகச் சிறிய அணுவுக்கெல்லாம் அணுவானது ஸ்வாமி என்று வருகிறது. ஸ்வாமி என்பவர் மிகச் சிறியனவற்றுக்கெல்லாம் சிறியதாய் இருப்பவர் என்றால் என்ன அர்த்தம்? அவர்தாம் எல்லாமாய் இருக்கிறார். அதனால் அவரைத் தவிர வேறு ஒன்று இல்லாத நிலை வந்துவிடுகிறது. சின்னதும் அவர்தான், பெரியதும் அவர்தான், சின்னதைக் காட்டிலும் சின்னதாக, பெரியதைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறவர் பட்டகட்டையாக ஸ்தாணுவாக-இருக்கிறார். அப்படி உட்கார்ந்திருப்பவர் காரியமே இல்லாமல் சாந்தமாக உட்கார்ந்திருப்பவர், ஆனந்தமாக உட்கார்ந்திருப்பவர் தக்ஷிணாமூர்த்தி.
38. சிவன் கோயிலுக்குப் போனால் மஹாலிங்கம் கிழக்கே பார்த்துக் கொண்டிருப்பார். அவருக்கு ஈசான்ய (வடகிழக்கு) திக்கில் நடராஜா தெற்கே பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு காலை வேறு தூக்கிக்கொண்டு நற்பார். அவரை எப்பொழுதும் நாம் இருதயத்தில் தியானம் பண்ணிப்பண்ணி, கொஞ்சம் கொஞ்சமாக அவரை நினைத்து, அந்த ஆனந்த தாண்டவ மூர்த்தியின் ஸ்வரூபம் மனத்தில் ஸ்புரிக்கும்படி ஆகிவிட்டால் அதைத்தான் சித்தியாகி விட்டது என்று சொல்வது.
39. ஆனந்தத்திலே இரண்டு வகை இருக்கிறது. பொங்குகிற ஆனந்தம் ஒன்று, அடங்கி அனுபவிக்கின்ற நிலை ஒன்று. பொங்குகிற ஆனந்த தாண்டவ மூர்த்தி நடராஜா. அவர் சடையைப் பார்த்தாலே இது தெரியும். இப்படி இரண்டு பக்கமும் ‘கிர்ர்’ என்று அவர் சுற்றுகிற வேகத்தில் சடை தூக்கிக் கொண்டு நிற்கிறது. ‘விரித்த செஞ்சடையான்’ ஆகிவிடுகிறான். அப்போது அவன் கையில் இருக்கும் உடுக்கையிலிருந்து ‘அ இ உண், ருலுக்’ என்பதான பதினாறு சூத்திரங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனந்த தாண்டவ மூர்த்தியின் கையிலிருந்து வரும்படியான அந்தப் பதினாலு சூத்திரங்களுந் தாம் அதிலிருந்து விரிந்த மஹா பாஷ்ய புத்தகத்தில் அடங்கி இருக்கின்றன. கூத்தாடும்போது பொங்கி வந்த சப்தங்கள் புத்தகத்தில் அடங்கி இருக்கின்றன.
ஆனந்தக் கூத்தின் சப்தங்கள் அடங்கியிருக்கும் படியான புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு சாந்தமாக அமைந்திருக்கும் படியான ஆனந்தத்தோடு உட்கார்ந்திருக்கும்படியான மூர்த்தி தக்ஷிணாமூர்த்தி. இவரும் தெற்குப் பக்கம் பார்த்துக் கொண்டு தான் ஈச்வரனுடைய தென்னண்டைப் பிரகாரத்தில் உட்கார்ந்திருக்கிறார். நடராஜரின் கோலத்தில் சடைகள் நான்கு பக்கமும் விரிந்து கிடக்கின்றன. தக்ஷிணாமூர்த்திக் கோலத்தில் அவை அமைந்த ஜடா மண்டலமாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கே சந்திரன் தெறித்துக் கொண்டிருக்கிறது. இங்கே ஆனந்தமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ஒருகால் பூமியிலிருக்க இன்னொரு காலைத் தூக்கிக் கொண்டு அங்கே கூத்தாடிக் கொண்டிருக்கிறார். ஒரு காலின் மேல் இன்னொரு காலைத் தூக்கிப் போட்டுக் கொண்டு இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அங்கே ஆனந்தமூர்த்தி, இங்கே ஞானமூர்த்தி.
40. ‘சத் சித் ஆனந்தம்’ என்று நாம் கேட்டிருக்கிறோம். சச்சிதானந்தம் என்று சொல்லிக்கொண்டும் இருக்கிறோம். இதற்கு அர்த்தம் என்ன என்று அநேகம் பேருக்குத் தெரிந்திருக்காது. தெரிந்திருந்தாலும் புரிந்து கொண்டிருப்பவர்கள் சில பேர்தான் இருப்பார்கள். ‘சத்’ என்பது ஒரு புறம் இருக்கட்டும். ‘சித்’ என்பது தான் ஞானம். தக்ஷிணா மூர்த்தி காட்டிக் கொண்டு இருக்கும்படியான முத்திரைக்குச் சின்முத்திரை என்று பெயர். ஆனந்தம் பொங்கி அடங்கும் போது ஞானம் பூர்ணமாக நிறைந்திருந்தால் அதுதான் சாந்தம். ஞானம் நிறைந்தவனிடம் ஆனந்தமும் நிறைந்திருக்கிறது என்று அர்த்தம். ஞானம் நிறைந்து ஆனந்தமும் நிறைந்து, அடங்கியிருக்கும் படியான தக்ஷிணாமூர்த்தி சந்நிதானத்தில்தான் அவரைப் போலவே உட்கார்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு பெரியோர்கள் பஞ்சாக்ஷர ஜபம் பண்ணுவார்கள். ஜபம் பண்ணுவது தக்ஷிணாமூர்த்தி சந்நிதானம். தரிசனம் பண்ணுவது ஆனந்தக் கூத்தன் சந்நிதானம்.
41. பிக்ஷாடனமூர்த்தி அதோமுகமாக இருண்டு விரலைக் காட்டிக் கொண்டிருக்கும்படியான முத்திரையைச் சின்முத்திரை என்று சொல்லுகிறார் என்று நினைக்கிறேன். பிக்ஷாடன மூர்த்தியின் ஒரு கையில் இரண்டு கால்களையும் தூக்கிக்கொண்டு ஒரு குட்டிமான் நிற்கும். இவர் கையை வைத்துக் கொண்டிருக்கும்படியான முத்திரையை அது பார்த்துக் கொண்டு நிற்கிறாற்போல இருக்கும். ‘இதோ உனக்கு ஆகாரம் இருக்கிறது பார்’ என்று ஸ்வாமி சொல்வது போல் அந்த இரண்டு விரலையும் அதனிடம் காட்டிக் கொண்டிருப்பது போல இருக்கும். ஒரு புல்லை அதற்குக் காட்டுகிற மாதிரி, ‘உனக்கு ஒரு வஸ்து இருக்கிறது’ என்று சொல்கிற மாதிரி இருக்கிறது. இப்படி அனேகம் மூர்த்திகள்.
42. பாபத்தை ஒரே க்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான ஒரு பெயர் அது. சகல வேதங்களுக்கும் மத்தியில் இருப்பது. அதுவே வேதங்களின் ஜீவரத்னம். கோயிலில் மஹாலிங்கம் போலவும், தேகத்தில் உயிர்போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. அதை வாக்கினால் சொல்ல வேண்டும். யார் சொல்ல வேண்டும்? மனிதனாகப் பிறந்தவன் சொல்ல வேண்டும். ஊமையாக இல்லாத எவனும் சொல்லலாம். அதைச் சொல்லுவதற்காகத்தான் நாக்கு இருக்கிறது. மனிதன் அதைச் செய்யாவிட்டால் ‘நாக்கினால் செய்யக் கூடியதை இவன் செய்யவில்லை. இவனுக்கு நாக்கு கொடுத்தது பிரயோஜனமில்லை’ என்று பரமேச்வரன் திரும்பி வாங்கிவிடுவான். ஆகவே அதை எல்லோரும் சொல்லியாக வேண்டும். அதை ஒரு தரம் சொன்னால் போதும். வேறொரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே அது பாபத்தைப் போக்கிவிடும். (‘சிவ’ என்ற நாமாவே அது).
43. பரமேச்வரனை நாம் நேரில் பார்த்து நமஸ்காரம் பண்ண வேண்டாம். அவருடைய நாமாவே போதும். நமக்கு நன்றாகத் தெரிந்தது அது. நம்முடைய மதத்தில் பாப பரிகாரத்துக்கு சுலபமான மார்க்கம் இருப்பதாகச் சொன்னேன். அது இந்த ஸ்மரணந்தான். ப்ரதோஷ காலத்தில் இந்த நாமாவைச் சொன்னால் போதும். பெரியவர்கள் - சிஷ்டர்கள் சாயங்காலத்தில் இதைச் சொல்லுவார்கள். அப்பேர்ப்பட்ட பரமேச்வரன் சகல வேத சாஸ்த்திரங்களின் தாத்பர்யமாகிற ஓங்கார ஸ்வரூபமாக இருக்கிறார். ஓங்காரந் தான் எல்லாத் தத்துவங்களுக்கும் முடிவானது.
44. நேற்று ஒரு வைஷ்ணவர் குழந்தையோடும் தாயாரோடும் இங்கே வந்திருந்தார். குழந்தையைப் பார்த்து ‘உம்மாச்சித் தாத்தாவுக்கு நமஸ்காரம் செய்’ என்று அவர் சொன்னார். உம்மாச்சி என்றால் ஸ்வாமி என்பது அர்த்தம். குழந்தைகளின் பரம்பரையிலே சில வார்த்தைகள் வழங்கி வருகின்றன. அந்த வார்த்தைகள் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் வருஷங்களாக வந்து கொண்டிருக்கின்றன. பெரியவர்கள் வார்த்தை மாறும். குழந்தைகள் வார்த்தைகள் மாறா. உம்மாச்சி என்ற வார்த்தையும் குழந்தைகள் பரம்பரையில் வந்த பழைய வார்த்தை - உம்மாச்சி என்பது யாரைக் குறிக்கிறது?
ஒரு நாள் மலைக்கோட்டைக்குப் போயிருந்தேன். அங்கே ஒருவரை ‘உம்மாச்சு’ என்று கூப்பிட்டார்கள். அங்கே உள்ள கோயில் ஸ்ரீபாதந்தாங்கிகள் வாத்திமப் பிராமணர்கள். அவர்களில் திருநல்லமென்னும் கோனேரி ராஜபுரத்திலிருந்து வந்தவர்கள் இருந்தார்கள். திருநல்லத்தில் ஸ்வாமியின் பெயர் உமாமகேச்வரர் என்பது. அந்தப் பெயரை வைத்துக் கொண்டிருந்த உமாமகேச்வரையர் என்று ஒருவர் அங்கே இருந்தார். அவரைத் தான் ‘உம்மாச்சு’ என்று கூப்பிட்டார்கள். ஆகவே உமாமகேச்வரர் என்பது ‘உம்மாச்சு’ என்றாயிற்று என்று தெரிகிறது. அதுவே தான் உம்மாச்சி என்றும் ஆயிற்று. ஆகையால் குழந்தை பாஷையிலிருந்து அவர்களுடைய ஸ்வாமி உமாமகேச்வரர் என்பது தெரிந்தது. அந்த ஸ்வாமி அவர்களுக்கு மாறவில்லை.
குழந்தைகளுடைய எண்ணப்படி பழைய காலத்திலிருந்து ஸ்வாமியாக எண்ணப்பட்டு வந்தவர் உமாமகேச்வரர் என்பது தெரிகிறது. குழந்தைகளால் சொல்லப்படும் ஒரு விஷயத்துக்குப் பெருமை அதிகம். குழந்தை தான் தெய்வம். அவர்களிடத்தில் காமக் குரோதங்கள் இல்லை. ‘குழந்தையாக இரு’ என்று உபநிஷத் சொல்லுகிறது. அதற்கு மோச எண்ணம் இல்லை. கபடம் இல்லை. அவைகளெல்லாம் இல்லாதபோது வருவதுதான் உபநிஷத், உபநிஷத்தும் குழந்தையினுடைய வார்த்தையும் ஒன்றுதான். இந்த இரண்டும் பரமேச்வரரைச் சொல்லுகின்றன. பாகவதமும் அப்படியே சொல்லுகிறது. ஆகையால் நாம் எல்லோரும் சிவத்தியானம் செய்ய வேண்டும். சிவநாமோச்சாரணம் செய்ய வேண்டும். நல்ல கதியை அடைவதற்கு சுலபமான வழி அதுதான்.
45. சிவன் கோயில்களில் கர்ப்ப க்ருஹத்தில் உள்ள லிங்கத்தை மஹாலிங்கம் என்கிறோம். எந்தக் கோயிலிலும் மஹாலிங்கத்திற்குக் கபாலீச்வரர் என்றோ வன்மீகநாதர் என்றோ பல பெயர்கள் உண்டு. ஆனால் ஒரு மஹாலிங்கத்துக்கு மாத்திரம் மஹாலிங்கம் என்றே பெயர். அந்த மஹாலிங்கம் மத்தியார்ஜுனத்தில் இருக்கிறது. மத்தியார்ஜுனம் என்பது திருவிடைமருதூர். அங்குள்ள லிங்கத்தை மஹாலிங்கம் என்று விசேஷமாகச் சொல்லுகிறோம். காரணம் சோழதேசமே ஒரு கோயிலாக இருக்கிறது. “சிவ: சோளே” என்று சொல்வதுண்டு. சைவத்திற்குச் சோழதேசம் பிரசித்தம் என்பது அதன் அர்த்தம்.
46. எந்தச் சிவன் கோயிலிலும் கன்னி மூலையில் விக்நேச்வரரும், மேற்கில் சுப்பிரமணியரும், வடக்கில் சண்டேச்வரரும், தெற்கில் தக்ஷிணாமூர்த்தியும், அக்கினி மூலையில் சோமாஸ்கந்தரும், ஈசானததில் நடராஜரும் இருப்பார்கள். மத்தியார்ஜுனத்திற்கு நேர்மேற்கில் பத்துமைல் தூரத்திலுள்ள ஸ்வாமிமலை சுப்பிரமணிய க்ஷேத்திரம். அதற்குச் சிறிது தெற்கில் கன்னி மூலையிலுள்ள திருவலஞ்சுழிக் கோயில் திருவிடைமருதூர் மஹாலிங்கத்துக்கு விக்நேச்வரர் சந்நிதி. திருவிடைமருதூருக்குப் பத்துமைல் தெற்கில் ஆலங்குடி என்ற ஊர் இருக்கிறது. அது தக்ஷிணாமூர்த்தி க்ஷேத்திரம். இடைமருதுக்கு நேர் வடக்கிலுள்ள திருச்சேய்ஞலூர் என்பது சண்டேச்வரர் கோயில். திருவிடைமருதூருக்கு நேர் கிழக்கிலுள்ளது திருவாவடுதுறை. அது நந்திகேசுவரர் சந்நிதி. திருவாரூரில் சோமாஸ்கந்தர், தில்லையில் நடராஜர், சீர்காழியில் பைரவர். இப்படிச் சோழ தேசமே ஒரு சிவாலயமாக இருக்கிறது.
47. ஸ்வாமி இருக்கிறாரா? இருந்தால் அவர் எப்படி இருக்கிறார்? என்ன பண்ணுகிறார்? என்ற கேள்விக்குப் பதிலாகக் கண்ணன் கீதையில் அர்ஜுனனுக்கு உன்ன உபதேசம் பண்ணுகிறார் என்று கொஞ்சம் பார்ப்போம். “அப்பா, ஈச்வரன் தான் ஒவ்வொருத்தருடைய இருதயத்திற்குள்ளும் இருந்து அவர்களை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறான்” என்று சொல்கிறார். நீங்கள் பொம்மலாட்டம் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா? உள்ளே ஒருத்தன் இருந்துகொண்டு பொம்மைகளை உள்ளேயிருந்தே அனேகம் கயிறுகளைக் கட்டிக்கொண்டு அவற்றை இழுப்பதன் மூலம் ஆடவைப்பான். அந்தப் பொம்மைகள்போல் இருக்கிற தேகத்தையுடைய எல்லாப் பிராணிகளையும் உள்ளேயிருந்து ஒருத்தன் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறான். அவன் ஆட்டுகிறதனால் தான் இவை ஆடுகின்றன. அந்த ஈச்வரன் தான் எல்லாப் பிராணிகளுடைய ஹ்ருத்தேசத்திலும் இருக்கிறான் என்று கண்ணபிரான் உபதேசம் செய்கிறார்.
- ஹர ஹர மஹாதேவா -
அருள்மொழி அமுதம் முற்றிற்று

கொழுப்பைத் தவிர்க்கும் எளிய வழிகள்

பொதுவாக ஆண்களுக்கு 1600 முதல் 2000 கலோரிகளும், பெண்களுக்கு 1200 முதல் 1600 கலோரிகளும் தினமும் தேவைப்படுகிறது. இவற்றை எரிப்பதற்கு வசதியாக தசைத் திசுக்களின் அளவை அதிகரிக்க வேண்டும். கை, கால்களுக்கு பயிற்சி தந்தாலே போதும் தசைத் திசுக்கள் அதிகரிக்கும். இதனால் கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும். உடற்பயிற்சி இல்லாததால் உடற்பருமன் ஏற்பட்டிருந்தால் நடத்தல், நீந்துதல், ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், ஏரோபிக் பயிற்சி போன்றவற்றில் ஈடுபடலாம். 15 நிமிடங்கள் நடந்தாலே போதும் சுமார் 60 கலோரிகள் எரிக்கப்படும். அதிலும் காலைப் பொழுதில் நடந்தால் உடம்பில் இருக்கும் கொழுப்பு விரைவில் எரிக்கப்படும். இதய நோய் இருப்பவர்கள், கால் மூட்டு பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். நேரத்திற்குச் சாப்பிடுவது முக்கியமானது. ஒரே நேரத்தில் அதிகமாக உணவை உட்கொள்வதைவிட, அவ்வ‌ப்போது சாப்பிட்டால் கொழுப்பு தேங்குவதற்கான வாய்ப்பு குறைகிறது. இவ்வாறு சிறுகச் சிறுகச் சாப்பிடுவதால் ‌ஜீரண‌ம் எ‌ளி‌தி‌ல் நட‌ந்து உடல் புத்துணர்ச்சியுடனும் இருக்கும். ஒரு நாளைக்கு எவ்வளவு கலோரிகள் தேவை என்பதை கவனத்தில் வைத்துக்கொண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது. கொழுப்புச் சத்துக்களை விட கார்போஹைட்ரேட் பொருட்கள்தான் ‌சீக்கிரமாக எரிக்கப்படும். எனவே கொழுப்புச் சத்துள்ள பொருட்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. சாப்பிட்டவுடன் படுத்துவிடாமல் சிறிது தூரம் நடந்துவிட்டுப் படுத்தால் ஜீரணத்திற்கு உதவியாகவும், காலையில் எழும்போது மந்தத்தன்மை இல்லாமலும் இருக்கும். கொழுப்பும் தேங்காது. நடப்பதற்கு வாய்ப்பில்லாதவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தாலே போதும் அதுவே சில கலோரிகளை எரிக்க உதவுகிறது. பக்கத்து தெருவில் இருக்கும் நண்பரிடம் பேசுவதென்றாலும் கூட செல்ஃபோனை எடுத்துக்கொண்டு பேசுவதைத் தவிர்த்துவிட்டு, நடந்து சென்று அவரை நேரில் சந்தித்து பேசிவிட்டு வரலாம். தோட்டம் இருந்தால் காலையிலோ மாலையிலோ சிறு சிறு வேலைகளைச் செய்யலாம். இதேபோல, பக்கத்தில் இருக்கும் கடைக்குக்கூட பைக்கை எடுத்துச் செல்வதைத் தவிர்த்துவிட்டு நடந்து சென்று அவற்றை வாங்கி வரலாம். அலுவலகத்தில் லிஃப்டுகளைப் பயன்படுத்தாமல் படிகளின் மூலம் ஏறி இறங்குவதாலும் கூட தேக்கிவைக்கப்பட்ட கொழுப்பு வேகமாக எரிக்கப்பட்டு உடல் நலம் சீராகும். இவ்வாறாக அன்றாட வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும் உடம்பில் கொழும்பபுச் சத்து சேராமல் பார்த்துக் கொள்ளலாம். உடற்பருமனையும் தவிர்த்துவிடலாம்.

மனதை இளைமையாக வைத்திருக்க

மனதை எ‌ப்போது‌ம் உ‌ற்சாகமாக வ‌ை‌த்து‌க் கொ‌ண்டா‌ல் நா‌ம் எ‌ப்போதுமே இளமையாக இரு‌க்கலா‌ம். அதெ‌ப்படி ‌பிர‌ச்‌சினைக‌ள் வரு‌ம் போது மனதை உ‌ற்சாகமாக வை‌த்து‌க் கொ‌ள்ள முடியு‌ம் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் கே‌‌ட்கலா‌ம்.முடியு‌ம். எதையு‌ம் நே‌ர்மறையாக ‌சி‌ந்‌தி‌க்க ஆர‌ம்‌பி‌த்து‌வி‌ட்டா‌ல் ந‌ம்மா‌ல் எ‌ந்த ‌சூ‌ழ்‌நிலை‌யிலு‌ம் உடை‌ந்து போகாம‌ல் ம‌கி‌ழ்‌ச்‌சியாக வாழ முடியு‌ம்.ஒரு நகை‌ச்சுவை இரு‌க்‌கிறது. அதாவது ‌நீ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஏ‌ன் கவலை‌ப்பட வ‌ே‌ண்டு‌ம்? எ‌ல்லாவ‌ற்‌றி‌ற்குமே இர‌ண்டு வா‌ய்‌ப்புக‌ள்தா‌ன் உ‌ள்ளன.
வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஒ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ஆரோ‌க்‌கியமாக இரு‌ப்‌பீ‌ர்க‌ள் அ‌ல்லது நோ‌ய்வா‌ய்‌ப்படு‌வீ‌ர்க‌ள். முத‌லி‌ல் ‌நீ‌ங்க‌ள் நலமாக இரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் ‌நீ‌ங்க‌ள் ஏ‌‌ன் கவலை‌ப்பட வே‌ண்டு‌ம்? இ‌ல்லை,உட‌ல் நல‌க் குறைவு ஏ‌ற்படு‌கிறது எ‌ன்று வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.அத‌ற்கு‌ம் இர‌ண்டு வா‌ய்‌ப்புக‌ள்தா‌ன்.ஒ‌ன்று ‌நீ‌ங்க‌ள் குணமடை‌வீ‌ர்க‌ள். இ‌ல்லையெ‌ன்றா‌ல் இற‌ந்து‌விடு‌வீ‌ர்க‌ள்.‌நீ‌ங்க‌ள் குணமடை‌வீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் ஏ‌ன் அதை‌ப் ப‌ற்‌றி கவலை‌ப்பட வே‌ண்டு‌ம்.இ‌ல்லை இற‌ந்து ‌வி‌ட்டா‌ல் ஒ‌ன்று ‌நீ‌ங்க‌ள் சொ‌ர்‌க்க‌த்‌தி‌ற்கு செ‌ல்‌வீ‌ர்க‌ள் இ‌ல்லை நரக‌த்‌தி‌ற்கு செ‌ல்‌வீ‌ர்க‌ள்.சொ‌ர்‌க்க‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ன்றா‌ல் அதை‌ப் ப‌ற்‌றி கவலை‌ப்பட வே‌ண்டுமா எ‌ன்ன?இ‌ல்லை நரக‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ல்‌வீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல்...அ‌ங்குதா‌ன் உ‌ங்களது ஏராளமான ந‌ண்ப‌ர்க‌ள் இரு‌ப்பா‌ர்களே.. அவ‌ர்களுட‌ன் அர‌ட்டை அடி‌த்தே கால‌த்தை ‌க‌ழி‌க்கலாமே ‌பிறகு ஏ‌ன் கவலை‌ப்பட வே‌ண்டு‌ம்.. இதுதா‌ன் அ‌ந்த நகை‌ச்சுவை.ஆனா‌ல் இது நகை‌ச்சுவை ம‌ட்டும‌ல்ல‌.. வா‌ழ்‌க்கை‌யி‌ன் சுவையை அ‌றியு‌ம் வ‌ழியு‌ம் கூட..எ‌திலு‌ம் ஒ‌ன்று ந‌ல்லது அ‌ல்லது கெ‌ட்டது நட‌க்கு‌ம். ந‌ல்லது நட‌ந்தா‌ல் கவலை‌ப்பட ஒ‌ன்று‌மி‌ல்லை, கெ‌ட்டது நட‌ந்தா‌ல் அ‌திலு‌ம் இர‌ண்டு ‌விஷய‌ங்க‌ள். இ‌ப்படி இரு‌க்க, உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌ப் ப‌ற்‌றிய கவலையை தூ‌க்‌கி எ‌றி‌ந்து ‌வி‌ட்டு, வா‌ழ்‌க்கை எ‌ன்பது பூ‌ங்காவன‌ம் அ‌ல்ல போரா‌ட்ட‌க்கள‌ம் எ‌ன்பதை உணரு‌ங்க‌ள்.
போரா‌ட்ட‌க்கள‌த்‌தி‌ல் இழ‌ப்புகளு‌ம், வெ‌ற்‌றிகளு‌ம் சாதாரண‌ம். எத‌ற்கு‌ம் கல‌ங்காம‌ல் வாழ பழ‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். எ‌ப்போது‌ம் நட‌‌ப்பவை எ‌ல்லா‌ம் ந‌‌ன்மை‌க்கே எ‌ன்று அத‌ன் போ‌க்‌கி‌ல் உ‌ங்களது வா‌ழ்‌க்கையை ‌சிற‌ப்பாக வாழ‌ பழ‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.‌நீ‌ங்க‌ள் ‌எ‌ந்த ‌பிர‌ச்‌சினையையு‌ம் ச‌ந்‌தி‌க்காம‌ல் வா‌ழ்‌க்கை‌யி‌ல் செ‌ன்று கொ‌ண்டிரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் ‌நீ‌ங்க‌ள் தவறான‌ப் பாதை‌யி‌ல் பய‌ணி‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்று பு‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள். முத‌லி‌ல் உ‌ங்க‌ள் பாதையை மா‌ற்று‌ங்க‌ள். சில சமய‌ங்க‌ளி‌ல் இது பெ‌ரிய அள‌வி‌ல் மு‌ன்னே‌ற்ற‌த்தை அள‌ி‌க்கு‌ம்.பு‌திதாக செ‌ய்யு‌ம் போதுதா‌ன் உ‌ற்சாக‌ம் அ‌திக‌ரி‌க்கு‌ம். அரை‌த்த மாவையே அரை‌த்து ‌நீ‌ங்க‌ள் எதையு‌ம் சா‌தி‌க்க முடியாது எ‌ன்பதை உணரு‌ங்க‌ள். உ‌ற்சாக‌ம் உ‌ங்களு‌க்கு‌ள்தா‌ன் இரு‌க்‌கிறது. அதை வெ‌ளி‌யி‌ல் தேடா‌தீ‌ர்க‌ள். ம‌ற்றவ‌ர்களு‌க்கு மு‌ன்னுதாரணமாக வா‌ழ்‌ந்து கா‌ட்டு‌ங்க‌ள்.
.

Saturday, October 23, 2010

காயத்ரி மந்திரம்


ஐந்து முக தெய்வமான அன்னை காயத்ரியை வணங்க மந்திரம் இருக்கிறது.


ஓம் பூர்புவஸ்ஸுவ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ நஹ் ப்ரசோதயாத்


இதன் பொருள் என்ன?
எல்லா பாவங்களையும், அறியாமையும் போக்குகிரவரும், வணங்குவதிகுரியவரும், இவ்வுலகத்தை படைத்த கடுவளையும், அவரது புகழையும் தியானிப்போமாக. அவர் நம் புத்தியை வழி நடத்துவாராக.

வேதங்களின் தாயே காயத்ரி. பசுவின் பாலைவிட சிறந்த உணவு கிடையாது. அதுபோல காயத்ரி மந்திரத்தின் அதிதேவதை சவிதா. விச்வாமித்திரரே ரிஷி. அதிகாலை பொழுதில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து ஜபிக்கவேண்டும். நீராடியபின் ஜபிப்பது சிறந்தது. முடியாவிட்டால் பல் தேய்தவுடன், கால் கைகளை சுத்தம் செய்துவிட்டு சொல்லத் தொடங்குங்கள். மந்திரத்தை தெளிவாகவும், தவறின்றியும், உச்சரிக்க பழகுங்கள். முடியாவிட்டால் பொருளை மனப்பாடம் செய்துக்கொண்டு தொடர்ந்து சொல்லி வாருங்கள். இந்த மந்திரத்தை ஜபிக்க மனத்தூய்மை பெருகும். மனம் வலிமை பெரும். ஞாபகசக்தி அபரிதமாக உண்டாகும். உங்களுக்கு பிடித்தமான எந்த தெய்வத்தையும் நாணத்தில் தியானிக்கவும். காயத்ரி பெண் தேவதை என்பதனால் சக்தி வழிபாட்டுக்குரியதாக பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள் யாராக இருந்தாலும் நம்பிக்கையோஎடு இம்மந்திரத்தை ஜபித்து நன்மை பெறலாம்.

தகவல்: சிவானந்த தபோவனம்.

Thursday, October 14, 2010

தமிழரின் வாழ்வில் வேதம் திருமுறைகளின் பங்கு

தமிழரின் வாழ்வில் வேதம் திருமுறைகளின் பங்கு


குமரகுருபரர் இதழ் - தலையங்கம்
சைவ சமயம் புராதனமான சமயம். சைவத் திருக்கோயில்கள் பாரம்பரியப் பெருமை உடையவை. நம் திருக்கோயில்களில் உள்ள இறை திருமேனிகள் வேத மந்திரங்களால் உருவேற்றப்பட்டவை. கும்ப தீர்த்தத்தில் சான்னித்தியங்களை, பிம்பத்தில் அபிஷேகித்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கச் செய்யும் அதி சூட்சம முறையையே கும்பாபிஷேகம் என்கிறோம். வேத வேள்விகள் இறைவனையும் தேவதைகளையும் அவிர்ப் பாகத்தால் திருப்திப்படுத்தும் நுணுக்கமான தேவகன்மங்கள் ஆகும். இச்செயல்களால் திருக்கோயில் இறை திருமேனிகளில் சான்னித்தியம் பிரகாசிக்கிறது. அப்படிப்பட்ட திருமேனிகளின் முன் சென்று பயபக்தியுடன் வேண்டும் அடியார்களின் வேண்டுதல்கள் யாவும், வேண்டியாங்கு நிறைவேற்றப்படுகின்றன.

இறை திருமேனிகளின் சான்னித்தியத்தை மந்திரங்களாலும், நித்திய நைமித்திக வழிபாடுகளாலும் காப்பதும், மேம்படுத்துவதும் சமயச் சான்றோர்களின் கடமையாகும். இது, வரங்கள் வேண்டி ஏங்கிக் கிடக்கும் பல்லாயிரம் கோடி பக்தர்களின் நலன் சம்பந்தப்பட்டது. இது விஷயத்தில் கவனக்குறைவோ, மரபு மீறலே ஏற்படுத்திப் பக்தர்களுக்குப் பலன் கிடைக்காதபடிக்கு ஆக்கி, அவர்களின் தெய்வ நம்பிக்கையைப் பாழ்படுத்திவிடக் கூடாது.

வேதம் பொதுவானது. தனியொரு பிரிவினருக்கு என்றில்லாமல், தெய்வத்திற்கே உரிய மொழியில் வேதங்கள் உள்ளன. “வேதங்கள் இறைவனே அருளியவை” என்பதே நம் சைவத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. இறைவன் அருளிய வேதங்களில் இறைவனே போற்றப்படுகிறான். “தன்னை ஒப்பார் பிறர் இல்லாமையால் தாமியற்றிய வேதங்களில் இறைவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டா” என்று, 300 ஆண்டுகளுக்கு முன்னரே கங்கைவரை சென்று, காசியில் சைவமும் தமிழும் பரப்பிய அருட்கவிஞர் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் அதற்குக் காரணம் சொல்கிறார்.

தமிழர்கள், ஆதியிலிருந்தே வேதங்களைப் போற்றி வந்துள்ளனர். மறை (வேத) வழக்கம் இல்லாதாரை “மாபாவிகள்” என்றே நம் சைவம் கடிந்து பேசுகிறது.

“வேதத்தில் உள்ளது நீறு”, “வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே” என வேதத்தை ஏற்றுப் போற்றும் சைவத்தின் முதல் ஆச்சார்யர் திருஞானசம்பந்தப் பெருமான், “வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி அமனொடு தேரரை”, “ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்த சங்கதபங்கமா........ ஆகதர்” என்றெல்லாம் வேதாகமங்களை வெறுத்த சமண சாக்கியர்களைப் பதிகந்தோறும் பத்தாவது பாடலில் சாடிப் பாடியுள்ளமையும், “மாசுமெய்யர் மண்டைத்தேரர், குண்டர், குணமிலிகள், பேசும் பேச்சை மெய்யென்றெண்ணி யந்நெறி செல்லன்மின்” என்று நமக்கு அறிவுறுத்தி யுள்ளதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

சமயங்கள் யாதாயினும் அதன் மரபுகளைக் கடைப்பிடிப்பதே அச்சமயிகளின் கடமை. அதில் மாறுபடுபவர்கள் அச்சமயத்திலிருந்து நீங்கியவராவர்.

“அனுச யப்பட் டதுஇது வென்னாதே
கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப்
புனித னைப்பூவனு னூரனைப் போற்றுவார்
மனித ரில்தலை யான மனிதரே.”
- திருநாவுக்கரசர்.

கி.மு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நூலாகிய தொல்காப்பியத்தைக் கேட்டு அங்கீகரித்தவர் என்று அதன் பாயிரத்தில் “அதங்கோட்டாசான்” என்பவரை, பாயிரம் பாடிய தொல்காப்பியரின் ஒரு சாலை மாணாக்கராகிய பனம்பாரர் குறிப்பிடுகிறார். அதில் அவர் அதங்கோட்டாசானை “நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்” எனக் குறிப்பிடுகிறார். சதுர்வேத பண்டிதராகக் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலேயே சேரநாட்டுத் தமிழர் ஒருவர் விளங்கியிருந்தார் என்பதை நாம் மறக்கக்கூடாது. தொல்காப்பியமும் வேதத்தை “அந்தணர் மறை” என்றே குறிப்பிடுகிறது.

இடைச்சங்க காலத்துப் பாண்டிய மன்னனாகிய முதுகுடுமிப் பெருவழுதி, வேத வேள்விகள் பல செய்வித்தமையால் “பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி” என்ற சிறப்புப் பெயர் பெற்றான்.

தமிழின் மிகப் பழம்பெரும் அறநூலாகிய திருக்குறளும் “அந்தணர் நூ”, “ஓத்து” என்று வேதத்தைச் சொல்கிறது; “அவிஉணவு” என்று அவிர்ப்பாகத்தை - வேள்வி உணவைச் சொல்கிறது. திருக்குறள் “அறுதொழிலோர்” என்று குறிப்பிடுவதில் உள்ள ஆறு தொழில்களில், “வேதம் ஓதுதல், வேதம் ஓதுவித்தல், வேத வேள்வி செய்தல், வேத வேள்வி செய்வித்தல்” என்பன அடங்கும். திருக்குறளைத் “தமிழ் மறை” என்கிறோம். “மறை என்ற சொல் வடமொழி வேதத்தையே குறிக்கும். ஆகையினால் “தமிழ்” என்கிற முன் ஒட்டுச் சேர்த்துச் சொல்கிறோம்.

சங்க இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் அக்காலத்தில் வேத வேள்விகள் பரவலாக நடந்தமைக்கான சான்றுகள் பல உள்ளன.

காப்பிய இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தில், கண்ணகியின் திருமணம் வேத முறைப்படி, “மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட நடந்தது” என்று வருகிறது. கண்ணகி கோட்டத்திற்குச் சேரன் செங்குட்டுவன் வேத விதிப்படி குடமுழுக்குச் செய்வித்தான்; அத்திருவிழாவில் வேள்விச் சாலைக்கு மாடல மறயோனும் செங்குட்டுவனும் சென்ற காட்சி இளங்கோவடிகளால் விவரித்துச் சொல்லப்படுகிறது.

இவையெல்லாம் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆயிரம் ஆண்டுகளில், தமிழ் நிலத்தில் - தமிழரின் வாழ்வில் வேதங்கள் - வேள்விகள் கொண்டிருந்த தொடர்புகள் பற்றிய ஆவணக் குறிப்புகள். தமிழில் வேதங்கள் என்றோ, தமிழில் வேள்விகள் என்றோ கூறுவதற்குச் சான்றே இல்லை.

தேவாரங்கள் வேதசாரங்கள். அவை கைகாட்டுவது வேதங்களி - ஆகமங்களை - வேத வேள்விகளை. திருமுறைகளில் வேத வேள்விகள் பற்றிய நூற்றுக்கணக்கான புகழுரைகள் உள்ளன. வேத வேள்விகளை நிந்தனை செய்வதை பெரும் குற்றமாகவே நம் திருமுறைகள் அறிவிக்கின்றன. அப்படிச் செய்பவர்களைப் புறச்சமயத்தார்களாகவே அவை புறந்தள்ளுகின்றன. திருமுறைகளில் மிகப் பழமையானது எனப்படும் திருமந்திரம், “வேதத்தைவிட்ட அறம் இல்லை” என்றதுடன், வேதம் பற்றித் தர்க்கவாதம் செய்தல் கூடாது எனவும் எச்சரிக்கிறது. வேதம், ஆகமம் பற்றித் தனித் தலைப்பிட்டே திருமூலர் கொண்டாடுகிறார். தன்னை நன்றாகப் படைத்தது, சிவனை நன்றாகத் தமிழ் செய்வதற்காக என்று குறிப்பிட்ட அவர், வேதங்களைப் புகழ்ந்ததை மட்டும் கண்டும் காணாமற்போவது எப்படி முறையாகும்?

தமிழருக்கென்று தனியொரு வேள்வி இருந்ததாக எவ்விதச் சான்றும் இல்லை. சமயாசாரியர்கள், சந்தானாசாரியர்கள் போன்ற அருளாளர்கள் வாழ்ந்த காலங்களில் தமிழில் வேள்வி, தமிழில் கும்பாபிஷேகம் என்றெல்லாம் மரபை மாற்றி யாரும் பேசவுமில்லை, செய்யமுற்படவும் இல்லை. எனவே அவை “மரபு மீறல்” எனச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை, அவர்களுக்கு எழவில்லை.

நாம் பேசுவது தமிழ். திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய திருமுறைப் பாடல்கள், “திருநெறிய தமிழ்” என்றும், அது இறைவன் தனது வாக்கென்றும் குறித்துள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும். பாடுவார்க்கும் கேட்பார்க்கும்; அவர்க்கும் தமர்க்கும், இம்மைக்கும் மறுமைக்கும் நற்பயன் உண்டென்றும்; எல்லியும் பகலும் இடர் இல்லை என்றும், எல்லாப் பேறுகளும் கிட்டுமென்றும் அருளியுள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும். திருமுறையைக் கொண்டு வேள்வி செய்ய யாண்டும் அருளியதில்லை. திருஞானசம்பந்தப் பெருமான் அனல்வாதப் புனல்வாதங்களால் திருநெறியத் தமிழ்த் திருமுறைகள் “வெந்தழலில் வேகாது, வெள்ளத்தால், போகாது” என்று மெய்ப்பித்துக் காட்டிய பின்னும், திருமுறைகளை குண்டத்திலும் குடத்திலும் செலுத்துவது நெறியல்லா நெறி என்று உணர வேண்டும். இறைவன் திருச்செவியில் நேரே சென்று சேர்ந்து பயனும் அளிக்கும் தமிழை - திருமுறைகளை ஊடகங்கள் வழி செலுத்துவதுதான் தமிழுக்கும் திருமுறைக்கும் பெருமையா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறெல்லாம் சொல்வது இடையாயினார்க்கு, மறைகள் நிந்தனை சைவ நிந்தனைபொறா மனத்தினார்க்கு.

ஆங்கிலக் கல்வியை உயர்த்திப் பேசினால் அப்படிச் சொல்டவரை, யாரும் “தமிழ்த் துரோகி” என்று சொல்வது இல்லை. “தமிழும் வடமொழியும் சைவத்தின் இரு கண்கள்; திருமுறைகளும் வேதங்களும் நம் கண்மணிகள்” என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவரும் மரபைச் சொன்னால், சிலர் தமிழ்ப் பற்றில்லாதவர்கள் என்ற ஆதாரவிரோத வார்த்தைகளை அள்ளிவிடுகிறார்கள்.

திருமுறைகள் ஓதுவதற்கு உரியன. அப்படித்தான் திருமுறை ஆசிரியர்களே நமக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். திருமுறை ஓதினால் நிச்சயம் பயன் உண்டு. வேதங்களில் வேள்விச் சடங்குகள் உள்ளன. அந்தத் தேவை உள்ள இடங்களில் அதைத்தான் பயன்படுத்த வேண்டும். இவையெல்லாம் தெரிந்துவைத்துக் கொண்டும் தமிழ்ப் பற்று என்னும் போர்வையில் புகுந்து கொண்டு, வசதிக்காக - புகழுக்காக - பொருளுக்காக - கூட்டம் சேர்ப்பதற்காக – மரபுகளை மறைத்துப் பேசலாமா? செயற்படலாமா?

எதற்கு எது உரியதோ, அதற்கு அதைப் பயன்படுத்த வேண்டும். அறிவாற்றல்களால், ஞானத்தால் பழுத்த நம்முன்னோர்கள் எப்படிச் சொன்னார்களே அப்படி நடக்க வேண்டும்; அவர்களுக்கு இல்லாத தமிழ் பற்று நம்மில் யாருக்கு இல்லை.

வேதங்களை உடன்படுபவர்களுக்குத்தான் “வேள்வி” என்ற சொல்லை உச்சரிக்கவே தகுதி வரும்.

மழையை வரவழைக்க வேள்விகள் உள்ளன. அவை வேத வேள்விகள். ஆனால், சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஏயர்கோன் கலிக்காம நாயனாருடன் திருப்புன்கூர் தலத்தைத் தரிசனம் செய்தபோழ்து, “வையகம் முற்றும் மாமழை மறந்து வயலில் நீரில்லாத காலத்தில் மழை பெய்ய” பன்னிருவேலி நிலம் இறைவர்க்குக் கொடுத்ததும், பெய்த பெருமழையால் உண்டாகிய பெருவெள்ளத்தை நீக்கி, அதன்பொருட்டு ஏயர்கோன் கலிக்காமரிடம் மீண்டும் ஒரு பன்னிரு வேலி நிலத்தை இறைவன் பெற்றருளினான் என்ற வரலாற்றைத் திருப்புன்கூர்த் தேவாரத்தில் பதிவு செய்துள்ளார்.

பெருமழையைத் தருவித்ததும், நிருத்தியதும் பக்தியே ஆகும். எனவே திருப்பதிகங்கள், ஓதிப் பயன்பெற உரியன என உணர வேண்டும். திருமுறைகளை ஓதினாலே பயனுண்டு என்ற சைவத்தின் அரிச்சுவடித் தத்துவத்திலே நம்பிக்கை வேண்டும். “பெயர்த்தும் பன்னிருவேலி கொண்டு” (ஏயர்கோன் கலிக்காமர் வரலாறு) மழையை நிறுத்தினார் - திருமுறையைக் கொண்டு வேள்வி செய்து மழை பெய்யவில்லை.

வேள்வி செய்ய வேண்டும் என்ற உந்துதல் வந்துவிட்டால் வேத வழிப்பட்டதாக ஆகிவிடும். வேதத்தில் நம்பிக்கையில்லை. ஆனால் வேள்வியில் நம்பிக்கை உண்டு! அதையும் திருமுறைகளைக் கொண்டு செய்வது என்பது செய்யத்தக்க செயல் அல்ல என்பதை உணர வேண்டும். இத்தகு செயல்களை, கடந்த 50 ஆண்டுகட்கு முன்னர்வரை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும். இத்தகைய “மரபு மீறும் செயல்கட்கு மறைகளோ, திருமுறைகளோ எந்த வழியும் வைக்கவில்லை” என்று தெரிந்தே அவ்வாறு செய்வது, திருமுறைகளில் ஆழங்காற்பட்ட பயிற்சி இல்லாத, தமிழ் ஆர்வம் என்ற மாயைக்கு உட்பட்ட, எளிய மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி, அதன்மூலம் புகழ், பொருள் சேர்க்கும் நோக்கமாகவே கருதப்படும். தமிழ்ப் பற்று - திருமுறைப் பற்று என்று கொள்ளப்பட்டாது.

சிந்தித்து தெளிந்தார்க்கு பாராயணம் செய்யவேண்டிய திருமுறைகளைத் தொடர்ந்து தந்துள்ளோம். நாள்தோறும் அதனைப் பாராயாணம் செய்யுங்கள். ஒல்லும் வகையில் பிறரையும் அந்நெறியில் ஆற்றுப்படுத்துங்கள். வேண்டுவோர்க்கு இம்மையே நன்மைதரும் திருமுறைத் திருப்பதிகங்கள் அனுப்பப்பெறும்.

பண் - பழம்பஞ்சுரம்


திருச்சிற்றம்பலம்

1156 வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.1
1157. வைதி கத்தின் வழியொழு காதவக்
கைத வமுடைக் காரமண் தேரரை
எய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே
மைதி கழ்தரு மாமணி கண்டனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.2
1158. மறைவ ழக்கமி லாதமா பாவிகள்
பறித லைக்கையர் பாயுடுப் பார்களை
முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே
மறியு லாங்கையில் மாமழு வாளனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.3
1159. அறுத்த வங்கமா றாயின நீர்மையைக்
கறுத்த வாழமண் கையர்கள் தம்மொடுஞ்
செறுத்து வாதுசெ யத்திரு வுள்ளமே
முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.4
1160. அந்த ணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே
வெந்த நீற தணியும் விகிர்தனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.5
1161. வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே
காட்டி லானை உரித்தஎங் கள்வனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.6
1162. அழல தோம்பும் அருமறை யோர்திறம்
விழல தென்னும் அருகர் திறத்திறங்
கழல வாதுசெ யத்திரு வுள்ளமே
தழல்இ லங்கு திருவுருச் சைவனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.7
1163. நீற்று மேனிய ராயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே
ஆற்ற வாளரக் கற்கும் அருளினாய்
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.8
1164. நீல மேனி அமணர் திறத்துநின்
சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே
மாலும் நான்முக னுங்காண் பரியதோர்
கோல மேனிய தாகிய குன்றமே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.9
1165. அன்று முப்புரஞ் செற்ற அழகநின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத்
தென்ற வாதுசெ யத்திரு வுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.10
1166. கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட
மாடக் காழிச்சம் பந்தன் மதித்தஇப்
பாடல் வல்லவர் பாக்கிய வாளரே.
3.108.11



திருச்சிற்றம்பலம்

Monday, September 27, 2010

பிரகதீஸ்வரம் - அதுவே விஸ்வரூபம் : பெரிய கோயில் 1000 ஆண்டுகள்

அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.
இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது.

மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.

யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.

திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.

வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு.

மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.

கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.

இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்.

பாலகுமாரன், தலைசிறந்த இலக்கிய படைப்பாளி, நாவலாசிரியர்

வெல்க தமிழ்



தமிழர்கள் இரண்டு பேர் சந்தித்தால் தயவு செய்து தமிழில் மட்டும் பேசுங்கள்



நன்றி : தினமலர்

Friday, June 11, 2010

பூவும் நீரும்

சிவ மாயம்

"அட்ட புட்பம் அவைகொளு மாறுகொண்டு
அட்ட மூர்த்தி அனாதிதன் பாலணைந்து
அட்டு மாறுசெய் கிற்பஅ திகைவீ
ரட்ட னாரடி சேரு மவர்களே "

திருநாவுக்கரசர்

"புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு" என்பது திருமறை. மானிடராகப் பிறந்த ஒவ்வொருவரும் வழிபாடு செய்வது இன்றியமையாதது. வீடுகளில் செய்யப் பெறுவது ஆத்மார்த்த வழிபாடு. திருக்கோயில்களில் நிழ்கத்தப் பெறுவது பிரார்த வழிபாடு. இவ்விரண்டிலும் இறைவன் திருஉருவங்களுக்கு அபிஷேகம், அர்ச்சனை, முதலியன நிகழும். அபிஷேகத்திற்குரிய திரவியங்கள் இவை என்பதையும், அவற்றின் பயன்களையும், அதுபோல மலர்களின் மாட்சியும் அவற்றை இறைவனுக்கு சாத்துவதால் உண்டாகும் நன்மைகளையும் அறிந்துகொள்வது அவசியம். எவ்வித வழிபாடாக இருப்பினும் புறத்தூய்மையும் அகத்தூய்மையும் வேண்டும். புறத்தூய்மை நீரால் அமையும் ஆதலால் வழிபாட்டிற்கு முன்னர் நீராடி, தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து தூயவராக விளங்கவேண்டும். திருநீறு முதலிய சமய அடையாளங்களும் தேவை. ஐம்புலன்களாலும் மனம் சலனமடையாமல் இறை வழிபாட்டில் ஒன்றுதல் வேண்டும்.

திருக்கோயிலுக்குச் செல்லும் போது இறைவழிபாட்டிற்குரிய மலர்கள், அபிஷேகத் திரவியங்கள், தூபம், தீபம், முதலியவற்றிற்கான பொருள்களைக் கொண்டு செல்லவேண்டும். வழிபாட்டிற்குரியனவற்றை இடுப்பிற்க்குக் கீழே இருக்குமாறு எடுத்துச் செல்லக்கூடாது. இரு கைகளாலும் கொண்டுசெல்ல வேண்டும். தூய்மையான இடங்களில் வைக்கவேண்டும்.

அபிஷேகத் திரவியங்கள்:

தூய்மையான ஆற்றுநீர், கிணற்றுநீர், அபிஷேகத்திற்கு முதன்மையானதாகும். "சென்றாடு தீர்த்தங்கள் ஆனார்தமே" என்னும் அப்பர் பெருமானின் வாக்கினால் தீர்த்தம் இறைவனோடு தொடர்புடையதாகும். இதனைக் குடங்களில் தூய்மையானவர்கள் சென்று வாத்தியங்கள் முழங்க நாள் தோறும் கொண்டுவரல் வேண்டும்.

கங்கை எல்லா நீர்நிலைகளிலும் விளங்குகிறாள் என்பது மரபு. கொண்டுவந்த திருமஞ்சனத்திற்குரிய நீரில் பாதிரிபூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ, முதலிய மணமுள்ள பொருள்களை இடவேண்டும்

"தடங்கொண் டதொர் தாமரைப் பொன்முடி தன்மேல் குடங்கொண் டடியார் குளிர்நீர் சுமந்தாட்ட" என்னும் திருஞானசம்பந்தர் வாக்கால் அபிஷேக நீர் இறைவனுக்குக் குளிர்ச்சியுடன் குடங்களில் கொணர்தல் வேண்டும் என்பதை அறியலாம். "போதொடு நீர் சுமந்தேத்த" என்னும் அப்பர் வாக்கால் உரிய காலங்களில் நீர் எடுத்து வரவேண்டும் என்னும் செய்தி தெரிகின்றது. பழைய நீரைப் பயன்படுத்தக் கூடாது.

அபிஷேக முறை:

நல்லெண்ணைய், மாப்பொடி, நெல்லிமுள்ளி, பஞ்சகாவ்யம், பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன், கரும்பின் சாறு, பழவர்க்கம், இளநீர், வாசனைச் சந்தனம், சிருங்கநீர், தாராநீர், ஸ்நபனநீர், சங்காபிஷேகம் ஆகியனவற்றை வரிசையாகச் செய்யவேண்டும். விபூதி, அன்னம், கும்பநீர், அர்க்கிய தீர்த்தம், இவற்றாலும் அபிஷேகம் செய்யவேண்டும்.

சகலாகம சங்கிரகம் என்னும் நூலில் கீழ்க்கண்ட முறை கூறப்பட்டுள்ளது. எண்ணெய், பஞ்சகாவ்யம், மாவு, நெல்லிமுள்ளி, மஞ்சள் பொடி, பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன், கரும்பின் சாறு, பழரசங்கள், இளநீர், அன்னம், சந்தனம், ஸ்நபனநீர்.

பலன்கள்

நன்னீர் ஆட்டினால் நம் விருப்பங்கள் இனிதே நிறைவேறும்: வாசனைத் தைலம் சுகத்தை அளிக்கும்: பஞ்சகாவ்யம் பாவத்தை போக்கும்: பசுவின் பால், தயிர், நெய், நீர், சாணம் இவற்றால் ஆவது பஞ்சகாவ்யம்.

"ஆவினுக்கருங்கலம், அரனஞ்சாடுதல்" பசுவிற்குப் பெருமை. அதன் ஐந்து பொருள்களை இறைவன் திருமஞ்சனத்திற்கு ஏற்றருள்கின்றான். மேலும் திருநாவுக்கரசர்

"பாவ முப்பழி பற்றற வேண்டுவீர்

ஆவில் அஞ்சுகந் தாடும் அவன்கழல்

மேல ராய்மிக வும்மகிழ்ந் துள்குமின்

காவ லாளன் கலந்தருள் செய்யுமே"

என்று கூறுவதால் பாஞ்சகவ்யா அபிஷேகத்தால் பாபம் போகுமென்பது திண்ணம்.

பஞ்சாமிருதம் உடல் திடத்தை நல்கும். யம பயத்தைப் போக்கும் என்பதை திருஞானசம்பந்தர்

"பாலினால் நறுநெய்யால் பழத்தினால் பயின்றாட்டி

நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்

சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டாங் குடியதனுள்

காலினால் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே" என்று திருவாய் மலருகின்றார்.

நெய் அபிஷேகம் செய்தால் மோட்சநிலை கிடைக்கும். பால் நீடித்த ஆயுளையும், சத்வகுணத்தையும் தரும்.

"பாலை யாடுவர் பன்மறை ஓதுவார்

சேலை யாடிய கண்ணுமை பங்கனார்

வேலை யார்விட முண்ட வெண் காடர்க்கு

மாலை யாவது மாண்டவர் அங்கமே"

என்னும் திருநாவுக்கரசர் திருவாக்கில், தேவர்கள் ஆலால நஞ்சால் சாவு நேரும் என அஞ்சியபோது அதனை அமுது செய்து தேவர்களுக்கு நீண்ட வாழ்வு தந்த வரலாறு பேசப்பெறுகின்றது. அப்பெருமான் உகந்தது பாலாகும்.

தயிர் கொண்டு அபிஷேகம் செய்வதால் நன்மைகளைப் பெறலாம். குழந்தைகள் பேரில்லதவர்கள் தயிர் அபிஷேகம் செய்து அக்குறையை நீக்கிக் கொள்ளலாம். மாப்பொடி கடன் தொல்லையை நீக்கி நல்வாழ்வு நல்கும். நெல்லிமுள்ளி அபிஷேகம் உடலிலுள்ள நோய்களைப் போக்கி நல்லுடம்பு தரும். கரும்புச் சாறு கொண்டு திருமஞ்சனம் செய்யின் ஆரோக்கியம் அளிக்கும். தேன் சுகத்தை கொடுக்கும்.

"வான நாடனே வழித்துணை மருந்தே

மாசி லாமணி யேமறைப் பொருளே

ஏன மாஎயி றாமையும் எலும்பும்

ஈடுதாங்கிய மார்புடை யானே

தேனெய் பால் தயிர் ஆட்டுகந் தானே

தேவ னேதிரு வாவடு துறையுள்

ஆனை யே எனை அஞ்சல் என் றருளாய்

ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே"

சுந்தரர்

பழங்களைக் கொண்டு பஞ்சாமிருதம் செய்து அபிஷேகம் செய்யின் செல்வப் பெருக்கு உண்டாகும். வாழைப்பழம் பயிர் வளர்ச்சியையும் மாம்பழம் மக்கட்பேறும் மாதுளை கோபத்தைப் போக்கி சாந்தத்தையும், கௌஞ்சி சோகத்தை நீக்கி இன்பத்தையும், நாரத்தம்பழம் ஒழுக்கத்தையும் நல்கும். எலுமிச்சை யம பயத்தை நீக்கும். சர்க்கரை பகையை அகற்றும். இளநீர் போகங்களைத் தரும். அன்னத்தினால் அபிஷேகம் செய்வது அரச வாழ்வு தரும். சந்தனம் கலந்த நீர் இலட்சுமி கடாக்ஷம் நல்கும். நைவேத்தியம் நிலப் பிரபுத்துவத்தை தரும். தாம்பூலம் சுகத்தையும் சங்காபிஷேகம் புண்ணிய வாழ்வையும் அளிக்கும்.

பஞ்சாமிருதம் இரு வகைப்படும். ரசபஞ்சாமிருதம் - ஏலக்காய் முதலிய வாசனைப் பொருள்களுடன் பால், தயிர், நெய், சர்க்கரை, தேன் சேர்த்துச் செய்யப்படுவது. பழபஞ்சாமிருதம் மேற்கூறிய பொருள்களுடன் வாழை, பலா, மா, முதலிய பழங்களையும் கூட்டிச் செய்யப்பெறுவது.

ஷோடச உபசார முறை:

அபிஷேக முறைகளை பார்த்தோம். பதினாறு வகையான உபசாரங்கள் வழிபாட்டில் செய்யப்பெற வேண்டும்.

தூபம், தீபம், மகாதீபம் (அடுக்குதீபம்), நாகதீபம், விருஷதீபம், புருஷதீபம், பூர்ணகும்பம், ஐந்து பஞ்சதீபம், நட்சதிர தீபம், மேரு தீபம், கற்பூர தீபம், மகாநீராஞ்சனம்.

மகா தீபம் பதினொன்று, ஒன்பது, ஏழு, ஐந்து, முன்று ஒன்று முதலிய அடுக்குகளாக அமைந்திருக்கலாம். பதினாறு அடுக்கு ஏகாதச ருத்திரர்கள், ஒன்பது அடுக்கு - நவசக்தி, ஏழு - சப்தமாத்ரு தேவதைகள், ஐந்து - பஞ்சபிரும்மம், மூன்று - மும்மூர்த்திகள், ஒன்று - சிவன் ஆகிய மூர்த்திகள் அதிதேவதைகள் ஆகும். தூபத்தை மூக்கிற்கு நேரிலும், தீபத்தை கண்களுக்கு எதிரிலும் காட்ட வேண்டும்.



உபசாரமில்லாவிடில் உண்டாகும் தீங்கு:
பூஜை இல்லாவிடின் ரோகமும், புஷ்பமில்லாவிடில் குலநாசமும், சந்தனமில்லாவிடின் குஷ்டரோகமும், ஜலமில்லாவிடில் துக்கமும், தூபமில்லாவிடில் சுகமின்மையும், தீபமில்லாவிடில் பொருள் முட்டுப்பாடும், நைவேத்யமில்லை எனில் வறட்சியும் மந்திரமில்லை எனின் வறுமையும் உண்டாலும்.

ஆடைகள்:
மிருதுவான பட்டு, பஞ்சு ஆகியவற்றால் ஆன வண்ணங்களுடன் கூடிய ஆடைகளை அணிவிக்க வேண்டும். ஆடை சாத்துவதால் சிவலோக வாழ்வு கிட்டும்.

சந்தனம்:
அகர், சந்தனம், கோஷ்டம், குங்குமப்பூ, கற்பூரம் இவைகளூடன் பன்னீர் கலந்த சந்தனம் சாத்த வேண்டும்.

ஆபரணங்கள்:
ஞாயிற்றுக்கிழமை மாணிக்க ஆபரணமும், திங்களன்று முத்துமாலையும், செவ்வாயன்று பவள வடமும், புதன் மரகத ஆபரணமும், வியாழன் புஷ்பராக அணியும், வெள்ளி வைர ஆபரணமும், சனி இந்திரநீல அணியும் அணிவிப்பது விஷேசம். எல்லா ஆபரணங்களையும் எல்லா நாட்களிலும் சாத்தலாம். ஆனால் மேலே கூறிய கிழமைகள் சிறப்பானவை.

மலர்கள்:
இறைவன் திருமுடியில் ஒருபோதும் மலர் இல்லாமல் இருக்கக்கூடாது.

காலை நேரத்தில் தாமரை, புரசம்பூ, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, சண்பகம், புன்னாகம் (,தாழை - இம்மலர் சிவவழிபாட்டில் பயன்படுத்தலாகாதது.) ஆகிய பத்துவித மலர்களால் வழிபட வேண்டும்.

நடுப்பகலில் வெண்தாமரை, அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்குபுஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஓரிதழ் ஆகியன நன்மை தரும்.

மாலையில் செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிமுல்லை, மருக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம் ஆகியன உகந்தன.

அஷ்ட புஷ்பங்கள்:
அறுகு, சண்பகம், புன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, பிருகதி, அரளி, தும்பை ஆகிய எட்டுமாம்.

உபயோகிக்க நாட்கள்:
தாமரை ஐந்து நாட்களுக்குள்ளும், அரளி மூன்று நாட்களுக்குள்ளும், வில்வம் ஆறு மாதத்திற்குள்ளும், துளசி மூன்று மாதத்திற்குள்ளும், தாழம்பூ ஐந்து நாட்களுக்குள்ளும், நெய்தல் மூன்று நாட்களுக்குள்ளும், சண்பகம் ஒரே நாளுக்குள்ளும், விஷ்ணுகிரந்தி மூன்று நாட்களுக்குள்ளும், விளாமிச்சை எப்போதும் பயன்படுத்தலாம்.

கையிற்கொண்டு வந்தது, தானாக விழுந்தது, காய்ந்தது, முகர்ந்துபார்க்கப்பட்டது, அசுத்தமான இடம், பொருள்களில் வைக்கப்பட்டது ஆகியன பூஜைக்கு ஆகாதனவாம். மலர்களைக் கிள்ளிச் சாத்தக்கூடாது (முழு மலராகவே சாத்த வேண்டும்). இலைகளைக் கிள்ளிச் சாத்தலாம். வில்வம், துளசி முதலியவற்றைத் தளமாகச் சாத்தவேண்டும்.

பூஜைக்குரிய இலைகள் (பத்திரங்கள்):
துளசி, முகிழ், சண்பகம், தாமரை, வில்வம், கல்ஹாரம், மருக்கொழுந்து, மருதாணி, தர்ப்பம், அறுகு, அசிவல்லி, நாயுறுவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி முதலியவற்றின் இலைகள் பூஜைக்குரியன.

தேவர்களுக்கு ஆகாத மலர்கள்:
அட்சதை, வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியன விஷ்ணுவுக்கு ஆகாதாம். செம்பரத்தை, தாழம்பூ, குந்தம், கேசரம், குடஜம், ஜபாபுஷ்பம் இவை சிவனுக்கு ஆகாதன. அறுகு, வெள்ளெருக்கு, மந்தாரம் இவை அம்மைக்கு ஆகாதன. வில்வம் சூரியனுக்கு கூடாது. துளசி விநாயகருக்குக் கூடாது.

மூன்று தளங்களை உடைய வில்வம் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்கள், சோம, சூரிய, அக்னி ஆகிய முக்கண்கள் மும்மூர்த்திகள் ஆகிய தன்மைகள் பெற்றன. மூன்று ஜன்மாக்களில் செய்த பாபத்தைப் போக்கும். மூன்று தளங்களும் இச்சை, ஞானம், கிரியை என்ற மூன்று சக்திகளின் வடிவம்.

பஞ்ச வில்வங்கள்:
முல்லை, கிளுவை, நெச்சி, வில்வம், விளா ஆகியன.

இறைவனுக்கு எல்லாவற்றையும் அர்ப்பணித்து வழிபடாமல் உண்பவன் பொருள் நாசத்தை அடையும். எனவே உகந்தனவற்றை நைவேத்யம் செய்ய வேண்டும்.

இத்தொகுப்பில் கண்ட செய்திகள் சிவாகமங்களில் கூறப்பெற்றவை. எனவே கூடுமானவரை விதிகளை உணர்ந்து தவறாது அபிஷேகம், அர்ச்சனை முதலிய வழிபாடுகளைச் செய்து நல்லன எல்லாம் பெருக.

"வாசநலஞ் செய்திமையோர் நாடோறு மலர்தூவ
ஈசனெம் பெருமானா ரினிதாக வுறையுமிடம்
யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளு மொழியாமே
பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே".
- திருஞானசம்பந்தர்.

திருச்சிற்றம்பலம்
(மதுரை பன்னிரு திருமுறை மன்றத்தின் பூவும் நீரும் என்ற வெளியீட்டைத் தழுவியது.)

Tuesday, June 8, 2010

தினம் ஒரு தியானம்

பகவத் கீதை

எவன் ஒருவன் என்னிடத்தில் மனத்தை வைத்து உயர்ந்த சிரத்தையுடன் என்னை உபாசிக்கின்றானோ, அவனே யோகத்தில் சிறந்தவன்.

எவன் ஒருவன் விஷயங்களில் பற்று வைக்காது, கருமத்தில் கருத்து வைக்காது, எண்ணங்களை விட்டோழிக்கிறானோ அப்பொழுதுதான் அவன் 'யோகாருடன்' (யோகத்தை அடைந்தவன்) எனப்படுகிறான்.

தனஞ்ஜயா யோகத்தில் நிலைபெற்று, பற்றற்று, வெற்றி தோல்விகளைச் சமமாக கொண்டு கர்மம் செய்.

சம புத்தியுடையவன் இவ்வாழ்க்கையில் புண்ணியம் பாவம் இரண்டையும் விடுகிறான்.

மனிதன் எவ்வாறு நைந்த உடைகளை எறிந்துவிட்டு புதிய உடையை அணிகிறானோ அதேபோல ஆன்மாவானது ஒரு உடலை விட்டு வேறொன்றை எடுத்துக் கொள்கிறது.

எப்படி தீயானது புகையால் மறைக்கப்படுகிறதோ, எப்படி கண்ணாடி அழுக்கால் மறைக்கப்படுகிறதோ, எப்படி கருவானது கருப்பையினால் மறைக்கப்படுகிறதோ, அப்படியே காமத்தால் ஞானம் மறைக்கப்பட்டிருக்கிறது.

என்னிடத்திலேயே மனதை நிறுத்து: என்னிடத்தில் புத்தியை வைத்திடு, அதன் பின் என்னிடத்திலே உறைவாய், ஐயமில்லை.

உடம்பு உண்டாவதற்கு காரணமாகிய சத்வம், ராஜசம், தாமசம் இம்மூன்று குணங்களையும் கடந்து பிறப்பு, இறப்பு, மூப்பு, ஆகியவற்றிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜீவன் மரணமிலா பேரானதத்தைப் பெறுகிறான்.

என்னிடம் அடைக்கலம் புகுந்து கர்மபலன் முழுவதையும் எனக்கே அர்ப்பணம் செய்.

சஞ்சல மனத்தை அடக்கி ஆத்மாவிடம் நிலைநிறுத்திவைக்க வேண்டும்.

தமோ குணம் மேலெழும் போது அவிவேகம், முயற்சியின்மை, மதிமயக்கம், கவனமின்மை, ஆகியவை உண்டாகிறது.

இறுதி காலத்தில் எந்தப் பொருளை நினைத்தவாறு ஒருவன் உடம்பை விடுகின்றானோ, எப்போதும் அந்தப் பொருளையே நினைக்கின்ற அவன் அந்த பொருளையே அடைகிறான்.

உயிர்கள் அனைத்தின் நிலையான பிறப்பிடம் நான் என்று அறிந்துகொள். நான் அறிவாளிகளில் அறிவாகவும் மேலோரில் மேன்மையாகவும் இருக்கிறேன்.

மண்ணில் நறுமனமாகவும் தீயில் தேஜஸாகவும் இருக்கிறேன். உயிரினங்களில் வாழ்க்கையாகவும், தபஸ்விகளின் தவமாகவும் நானே இருக்கிறேன்.

Thursday, June 3, 2010

தினம் ஒரு தியானம்

தினம் ஒரு தியானம்
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்

ஒன்றே குளம் ஒருவனே தேவன்

தண்ணீர் ஒன்றே, அதையே 'ஜலம்' என்று இந்துக்களும், 'வாட்டர்' என்று ஆங்கிலேயர்களும், 'பானி' என்று முகம்மதியர்களும் அழைக்கிறார்கள். அவ்வாறே இறைவனைச் சிலர் 'அல்லா' என்கிறார்கள், சிலர் 'பிரம்மம்' என்கிறார்கள், சிலர் 'காட்' என்கிறார்கள், சிலர் காளி, இராமர், ஹரி, ஏசு, துர்க்கை, என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

உள்ளம் உருகு


ஹரி நாமத்தையோ இராம நாமத்தையோ ஒருமுறை சொன்ன அளவிலேயே ஒருவனுக்கு மயிர்கூச்சம் ஏற்படுமானால், ஆனதக் கண்ணீர் வழியுமானால், அவன் அதன்பிறகு சந்தியா வந்தனம் முதலியவற்றைச் செய்யத் தேவையில்லை.

உருவமும் அருவமும்
உனக்கு அருவத்தில் நம்பிக்கை. அது நல்லது. ஆனால் அது ஒன்றுதான் உண்மை, மற்றவை பொய் என்ற என்னத்திற்கு இடம் கொடுக்காதே, அருவமும் உண்மை, அதுபோல உருவமும் உண்மை. இதை நினைவில் வைத்திரு. உனக்கு எதில் நம்பிக்கையோ அதைப் பிடித்துக்கொள்.

பிரம்ம தரிசனம்
சமாதி நிலையில் பிரம்ம ஞானம் ஏற்படுகிறது. பிரம்ம தரிசனம் கிடைக்கிறது. அந்த நிலையில் சிந்தனை முற்றிலுமாக நின்று விடுகிறது. மனிதன் மௌனி யாகிவிடுகிறான். கடலின் ஆழத்தை அளக்கச் சென்ற உப்பு பொம்மை மீண்டும் வந்து கடலின் ஆழத்தைச் சொல்ல முடுயுமா?.

பக்திக்கான வழி

விவேகம், வைராக்கியம். சாது சங்கம், சாது சேவை, ஈஸ்வர நாம சங்கீர்த்தனம், சத்தியம், முதலிய நற்குணங்களின் மூலமாக பக்தி பொங்கித் ததும்பும். பக்தி எவனிடம் பொங்கித் ததும்புகிறதோ, அவனுக்கு இறைதரிசனம் விரைவில் கிட்டும்.

ஜெகத்குரு

ஈஸ்வரன் ஒருவனே அனைவருக்கும் ஜகத் குருவாகவும் வழிகாட்டியாகவும் உள்ளான். குவானவர் மேன்மை பொருந்திய கங்கை நதிக்குச் சமமானவர். எவ்வளவுதான் குப்பை கூளங்களை எறிந்து குரு என்னும் கங்கையை அசுத்தம் செய்ய முயன்றாலும் அதன் பவித்ரம் ஒருபோதும் குறைவதில்லை.


நேரம் பொன் போன்றது

நீங்கள் விரும்புவது எது? சந்தனத்தின் பரிமளமான நறுமணமா? மலத்தின் கெட்ட நாற்றமா? உங்களுக்கு வேண்டியது அமைதியா, துயரமா? எது வேண்டும் என்பதை நிச்சயப்படுத்துங்கள், காலம் வேகமாய் ஓடும் ஓர் ஆற்றைப் போலச் சென்று கொண்டே இருக்கிறது. கடந்த நாளை எண்ணிக்கதருவதால் பயனில்லை. கணப்பொழுதையும் வீணாக்காமல் நிகழ் காலத்தைச் சிறந்த முறையில் பயன் படுத்திக் கொள்ளுங்கள். வேறொன்றையும் எண்ணாமல், எப்பொழுதும் இடைவிடாது கடவுளையே எண்ணும் வழியில் மனத்தைப் பழகுங்கள்.


மகா மந்திரம்

எல்லாவற்றையும் துறந்து கடவுளை நம்பி இருங்கள். அவரே உண்மை. மற்ற எல்லாம் நிலையர்றவையே அவரை அறியவில்லை என்றால் மற்ற எல்லாமே வீண்!. இதுதான் மகாமந்திரம்

அகன்காரத்திலிருந்து விடுபடு

'நான் செய்கிறேன்' என்ற அகங்காரத்தை விட்டு விட்டு பற்றின்றி செயல்கள் செய்ய முடியுமானால் மிகவும் நல்லது. பற்றின்றி பணி செய்யுந்தோறும் இறைவனிடம் பக்தியும் அன்பும் உண்டாகிறது. இத்தகைய பணி செய்வதன் மூலம் இறையனுபூதி வாயக்கிறது.

கர்ம யோகம்

கர்மம் பற்றுதலின்றிச் செய்யப்படுமானால் அது பகவானிடம் கொண்டு போய்ச் சேர்க்கும். இகபரங்களில் உண்டாகும் வெறுப்பு விருப்பு கொள்ளாமல் செய்யப்படும் கர்மம் முடிவில் இறைவனிடம் சேர்க்கும்


சிக்கல் சம்சாரம்

இறைவனிடம் பக்தி ஏற்படாமல், இல்லறத்தில் ஈடுபாடு கொண்டால் மேலும் மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்வாய். ஆபத்து, துன்பம், கவலை இவை எல்லாம் வந்து மோதும் போது மன உறுதியை இழப்பாய் உலகியல் விஷயங்களில் மனம் செல்கின்ற அளவுக்கு பற்றும் அதிகரிக்கும். ஆதலால், மனத்தை இறைவனிடம் வை.

Tuesday, June 1, 2010

மருத்துவ துறையில் சில கருப்பு ஆடுகள்

மருத்துவ துறையில் சில கருப்பு ஆடுகள்

இன்றைய காலக்கட்டத்தில் எதிலும் கலப்படம் என்பது அதிகம் ஆகிவிட்டது. இது மருத்துவத் துறையையும் விட்டு வைக்கவில்லை. இன்றைக்கு ஏழைகளின் உயிரோடு போலி மருந்து வியாபாரிகள் விளையாடுவது மிகவும் பரிதாபமாக உள்ளது. ஒரு சிலர் சீக்கிரமாக பணக்காரர்கள் ஆக வேண்டும் என்று தவறான வழிகளில் சென்று பணம் சம்பாதிக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு ஒரு சில போலி மருந்து வியாபாரிகளை கைது செய்து இருக்கிறது. இவர்கள் கடந்த சில வருடங்களாகவே போலி மருந்து விற்பனையில் கொடி கட்டி பறந்துள்ளார்கள் . இவர்களின் வருமானம் கோடிகளில் இருந்துள்ளது.
தமிழ்நாட்டில் எத்தனையோ ஏழை மக்கள் போலி மருந்தை உட்கொண்டு இறந்துள்ளார்கள். இன்றைய இந்தியாவில் பொய் சொல்பவர்களுக்கும், ஏமாற்றுகாரர்களுக்கும் அரசியல் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. கைதானவர்கள் கூடிய வரைவில் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி மிகவும் சீக்கிரமாக வெளியில் வந்து மீண்டும் இதே தொழிலை செய்ய வாய்ப்பு உள்ளது. ஏழைகளின் உயிரோடு விளையாடும் இவர்களை போன்றவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனைகள் அளிக்கப்படவேண்டும். அப்போதுதான் இவர்களின் விளையாட்டுத்தனதால் இறந்தவர்களின் ஆன்மா சந்தியடையும்.

இதே போன்று சில தவறுகள் சில தனியார் மருத்துவமனைகளிலும் நடைபெறுகிறது. ஏழைகளுக்கு சிறந்த மருத்துவம் என்பது இன்றைய காலக்கட்டத்தில் கிடைப்பது இல்லை. அனேக தனியார் மருத்துவமனைகளில் மிக மிக அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். பொது மருத்துவமனைகளிலம் ஒரு சில மருத்துவர்கள் ஏழைகளுக்கு சிறந்த வைத்தியம் பார்ப்பதில்லை. ஏனெனில் அனேக மருத்துவர்கள் சொந்தமாக மருத்துவமனைகளும், கிளீக்குகளும் வைத்து மருத்துவம் பார்ப்பதால் வருமானம் ஒன்றே குறியாக இருக்கிறார்கள்.

மருத்துவம் படிக்கும் இன்றைய இளைஞர்கள் தங்கள் படிப்பை முடித்ததும் கிராமங்களில் ஏழைகளுக்கு சிறந்த மருத்துவம் பார்ப்பதற்கு முன் வரவேண்டும். அப்போதுதான் ஒளிமயமான இந்தியாவை உருவாக்கமுடியும் என்பது நிதர்சனமான உண்மையாகும். மருத்துவ துறையில் உள்ள ஒரு சில கருப்பு ஆடுகளினால் நல்லவர்களின் சேவைக்கும் களங்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது.

Sunday, May 30, 2010

ஜல்லிக்கட்டு

தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு

பாரம்பரியமாக தென் தமிழகத்தின் வீர தீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு விளங்கிவருகிறது. பொங்கல் பண்டிகையின் போது இந்த வீர விளையாட்டு தென் தமிழகத்தின் அலங்காநல்லூர், பாலமேடு, மற்றும் பல பகுதிகளில் நடைபெற்றுவருகின்றது.

போட்டிகளில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர்கள், முதலில் இளம் கன்றுகளாக வாங்கி காலையில் கண்மாயில் காளைகளுக்கு நீச்சல் பழகிக்கொடுத்து, அதன் பின்னர் பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, தூசி, கருப்பட்டி, போன்ற உணவுப்பொருட்களை உணவாகக் கொடுக்கிறார்கள்.

மேலும் வயல் வெளிகளில் 2கயிறுகள் கட்டி காளைகளை அதன் இஷ்டத்திற்கு புல்லை மேயும்படி செய்யவைத்து மாலையில் வைக்கோலால் செய்து வைக்கப்பட்ட உருவ பொம்மையை இளைஞர்கள் விசில் அடித்தவுடன் காளைகள் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து தனது கொம்புகளால் முட்டுவதுக்கும்,
மேலும் குப்பை மேட்டில் காளைகளை
நிறுத்தி கால்களால் தரையில் உரசி புழுதி பறக்கும்படி செய்யவும் பயிற்சி அளிக்கிறார்கள்.



தமிழக அரசு இந்த வருடம்
ஜல்லிக்க்கட்டை நல்ல பாதுகாப்புடனும் நடத்தி வீரர்களின் உயிருக்கும், உடமைக்கும் எந்தவித தீங்கும் வராமல் மிகவும் சிறப்பாக நடத்தியது.

திரை அரங்கம்

தென் இந்தியாவின் முதல் திரையரங்கம்


சென்னை மாகாணத்தின் பல இடங்களில் டூரிங் தியேட்டர்களில் மவுனப்படங்கள் திரையிடப்பட்டு வந்தன. சென்னை மவுண்ட்ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ வைத்து இருந்த ரகுபதி வெங்கையா என்பவர், தானும் சினிமாவில் காலடி வைக்க விரும்பினார். முதல் கட்டமாக பியல் பிஷ்ஷர்ஸ் ராஜாஸ் கேஸ்கட் என்ற 500அடி நீளம் கொண்ட இரண்டு மவுன படங்களை அமெரிக்காவில் இருந்து வரவழைத்தார். கூடவே க்ரோனோ மெகாபோன் என்ற திரையிடும் ப்ரொஜக்டர் கருவியையும் வரவழைத்தார். சென்னை ரிப்பன் கட்டிடம் அருகில் இருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற அரங்கில் அந்த படங்களை திரையிட்டார். கூட்டம் அலைமோதியது. நல்ல வருமானம் கிடைத்தது. அதில் கிடைத்த வருமானத்தை கொண்டு ஒரு டூரிங் சினிமாவை தொடங்கினார். டூரிங் என்றால் ஊர் ஊராக சென்று சினிமாவை திரையிடுவது. இவரும் குண்டூர் தொடங்கி கட்டாக் வரை பல நகரங்களில் அந்த படங்களை திரையிட்டு லாபம் பார்த்தார்.
கிடைத்த லாபத்தை வைத்து சென்னையில் மவுனப்படத்தை திரையிடும் ஒரு நிரந்தர சினிமா தியேட்டரை கட்டினார். தென் இந்தியாவில் இந்தியர் ஒருவர் கட்டிய முதல் தியேட்டர் இது தான். 1913ல் கட்டப்பட்ட அந்த தியேட்டருக்கு கெயிட்டி என்று பெயரிட்டார். 2005வரை அந்த தியேட்டர் இயங்கிவந்தது.

இவரே 1914ல்தங்கச்சாலை சந்திப்பில் கிரவுன் என்ற தியேட்டர், 1915ல்புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் க்ளோப் என்ற தியேட்டரையும் கட்டினார். பின்னர் க்ளோப் தியேட்டர் ராக்சி என்று பெயர் மாற்றப்பட்டது. மூன்று தியேட்டர்களுமே மவுன படங்களை திரையிட்டு வந்தன.
அமெரிக்காவில் பிரபலமான யுனிவர்சல் நிறுவனம் தயாரித்த க்ளட்சிங் ஹேன்ட் கிரேட் ரிவார்டு, கீஸ் ஸ்டோன்காப்ஸ் போன்ற மவுன படங்களை வரவழைத்து தனது மூன்று தியேட்டர்களிலும் திரையிட்டார். ஹாலிவூட் சினிமாக்களை தெனிந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் வெங்கையாதான். இதன் மூலம் தெனிந்திய சினிமாவில் பெரும் தாக்கம் ஏற்பட்டது.

இந்த காலக்கட்டத்தில்தான் இந்தியாவில் ஹரிச்சந்திரா, கீசகவதம் போன்ற மவுனப்படங்கள் வெளிவந்தன. வெங்கையா இந்த இரண்டு படங்களையும் தனது மூன்று தியேட்டர்களிலும் மாறி மாறி திரையிட்டார். இவற்றின் வெற்றி இவரை படத்தயாரிப்பில் ஈடுபடும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. தனது மகன் ரகுபதி பிரகாசாவை லண்டனுக்கு திரைப்படதுறையில் பயிற்சிபெற அனுப்பினார்.

இந்தியர் ஒருவர் தெனிந்தியாவில் கட்டிய இந்த மூன்று தியேட்டர்களிலுமே 1932ல் பேசும் படங்களை திரையிடும் நவீன கருவிகளை பொருத்தினார். இதன்பின்னர் இங்கு பல பேசும் படங்கள் திரையிடப்பட்டன.

உடலுக்குள் விஞ்ஞானம்

உடலுக்குள் விஞ்ஞானம்
துணிநேய்யக்கூடிய மில்லில் ஒரு வேடிக்கையைப் பார்க்கலாம். கண்டைஎன்று சொல்வார்கள். கண்டை என்றால் நாடா இல்லை. நாடாவுக்குள்ளாக நூல் சுற்றி வருவதைக் கண்டை என்று சொல்வார்கள். கண்டையை கைத்தறியில் தார் என்று சொல்வார்கள். நாடாவுக்குள்ளக நூல் சுற்றி ஓடிக்கொண்டே இருக்கும். எங்கேயாவது நூல் காலியானால் அந்த கண்டையை தூக்கி எரிந்து விடும். அப்படி தூக்கி எரிந்தவுடனே, இன்னொரு இயந்திரத்தில் ஓடிக்கொண்டே இருக்கிற கண்டையில் ஒன்றை எடுத்து காலியான அந்த இடத்தில் மாட்டிக்கொள்ளும்.
கண்டையைப் போன்ற விஞ்ஞானம் நம் உடலிலும் நடைபெறுகிறது. உடலில்

ஒவ்வொரு செல்லும் ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்கிறது. சீவகாந்த அழுத்தம் ஒவ்வொரு செல்லையும் அப்படியே இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறது. எங்கேயாகிலும் வேகம் அதிகமானாலும் குறைந்தாலும் செல்கள் உடைந்து விடும். உடனே உடலில் உள்ள இரத்த அணுக்கள் சேர்ந்து எந்தெந்த இடத்தில பற்றாகுறை உள்ளதோ அதது அந்தந்த இடத்தில புதுப்பிக்கப்படும்.

காந்த ஆற்றலினால் செல்களுக்குத் தேவையானதை தள்ளி வெளியே கொண்டு செல்கிறது. இவ்வாறாக செல்லில் ஒரு பெரிய நிறுவனத்தைப் போன்ற நிர்வாகம் நடைபெறுகிறது. தானாகவே நடைபெறும் இந்த இயக்கத்திற்கு கபாட இயக்கம் என்று பெயர்.

கபாடம் என்றால் இடம் விடாமல் கொவ்விப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்று பொருள். கண்டயைப் போன்ற இயக்கமே கபாட இயக்கம் ஆகும்.

மருத்துவமும் மகத்துவமும்

வாழை பழத்தின் மகிமை

வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மட்டும் நிறைந்திருக்கவில்லை. மேலும் பல நோய்களை வராமல் தடுக்கக்கூடிய ஆற்றலையும் வாழைப்பழம் பெற்றுள்ளது. ஒவ்வருவரும் தினமும் ஒரு வாழைப்பழமாவது சாப்பிடுவது மிகவும் நல்லது. அதனால்தான் பழங்காலத்தில் எந்த விசேஷமாக இருந்தாலும் வெற்றிலையுடன் வாழைப்பழத்தை இணைத்துக் கொடுத்தனர்.

மலச்சிக்கல், குடல் பிரச்சினை, மனத் தளர்ச்சி ஆகியவற்றை நீக்கும் தன்மை உடையது. வாழைப்பழத்துடன் பால் சேர்த்து மில்க்ஷேக் சாப்பிட்டால் உடல் சோம்பல் ஓடிவிடும். புகை பழக்கத்தை விடமுடியாமல் தவிபவர்கள் வாழைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் புகைக்கும் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.


ஆண்மைக்கு ஜாதிக்காய்
ஜாதிக்காய்க்கு சில நோய்களை தவிர்க்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் உள்ளன. இது உடலை வலிமையாக்கும், வாயு கோளாறு காராணமாக வயிறு உப்பிசம், வயிற்றுவலி, வயிற்று பொருமல், அஜீரண மந்தம், வாந்தி, பேதி, ஒற்றை தலைவலி, மூச்சிறைப்பு, இருமல், ஆகிய பிரச்சனைகளை நீக்கும் ஆற்றல் உடையது ஜாதிக்காய். குறிப்பாக ஆண்களுக்கு விந்துக் குறைவை போக்கிறது. ஜாதிக்காய் எண்ணை
பல்வலி, வாத நோய் ஆகிய சிக்கல்களை நீக்கும் ஆற்றல் உடையது.

Saturday, May 29, 2010

சுற்றுலா

எங்கள் நிறுவனத்தில் சென்ற மாதம் மூணாருக்கு சுற்றுலா சென்று கொஞ்சம் களைப்பாறி வந்தோம். நான் ரசித்த சில இடங்களை உங்களுடன் இதன் மூலம் பரிமாறிக்கொள்கிறேன்.